தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ்.

இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், விஜய் நடித்த ‘சுறா’ என்ற திரைப்படம் வெளி வந்து இன்றோடு (ஏப்ரல் 30-ஆம் தேதி) 10 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆகையால் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#10YearsOfSura’ என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் நடிகர் விஜய்யின் ரசிகர்கள்.

Advertisement

2010-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தினை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார். இதில் ‘தளபதி’ விஜய்-க்கு ஜோடியாக பிரபல நடிகை தமன்னா நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, தேவ் கில், ரியாஸ் கான், ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருந்தனர். ‘தளபதி’ விஜய்யின் திரை உலக வாழ்வில் ‘சுறா’ திரைப்படம் அவருக்கு 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இப்படம் தொடர்பாக இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் பேசுகையில் “நானும் விஜய் சாரும் இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், படம் வெற்றி பெறவில்லை.

படம் ரிலீஸான போது, மலேசியாவில் இருந்து நல்ல விமர்சனங்களே வந்தது. அதன் பின், என்ன ஆனது என்று தெரியவில்லை, நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வந்தது. அந்த சமயத்தில் பலர் விஜய் சாருக்கு எதிராக வேலை பார்த்தார்கள். அதனால் படம் ஃப்ளாப் ஆனது. அதோடு திரையுலக பயணத்தில் என்னுடைய கேரியரையும் காலி பண்ணிட்டாங்க. படத்தை முழுவதுமாக பார்த்த விஜய் என்னை கட்டிப்பிடித்து “படம் சூப்பரா இருக்கு அண்ணே” என்று கூறினார்.

Advertisement

படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ வாங்கி மிகப் பெரிய அளவுல ப்ரொமோஷன் பண்ணாங்க. படம் ஃப்ளாப் ஆனதும், பலர் கதையில் விஜய்யின் தலையீடு இருந்திருக்கும் என்று பேசினார்கள். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். ஆனால், அவருடைய 50-வது படமாக ஒரு ஃப்ளாப் படத்தை கொடுத்து விட்டோமே என்று எனக்கு மிகப் பெரிய வருத்தம் இருக்கிறது.

Advertisement

படத்துல வில்லனா தேவ் கில்லிற்கு பதிலாக வேற யாரையாவது நடிக்க வச்சிருக்கலாம். அவர் விஜய் சாருக்கு சமமா இல்ல. அது நான் பண்ண மிகப் பெரிய தப்பு. இந்த படம் ரிலீஸாகி ஃப்ளாப் ஆனாலும் இப்போ வரைக்கும் விஜய் சார் என்னை கூப்பிட்டு ஒரு தப்பும் சொன்னதில்லை. ஒரு வேளை படம் ஹிட்டாகியிருந்தால், என்னுடைய ஃலைப் மாறியிருக்கும். மற்ற பெரிய நடிகர்களை வைத்தும் படம் இயக்கியிருப்பேன்.

இப்படத்தின் பாடல் காட்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஒரு முறை அஜித் சார் வந்திருந்தார். அப்போது விஜய் சார், என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு, என்னிடம் பல நல்ல கதைகள் இருப்பதாக கூறினார். எனக்கும் அஜித் சாரை வைத்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், ‘சுறா’வின் தோல்வி என் கனவை கலைத்து விட்டது. ஆகையால், பெரிய நடிகர்களுக்கு நான் கதையே சொல்வது இல்லை. அவர்கள் என்ன பற்றி என்ன நினைப்பார்கள் என்று எனக்கு தெரியும். அடுத்ததாக நான் எடுக்கப்போகும் ஒரு படத்தில் ஆர்.கே சார் நடிக்கப்போகிறார்” என்று இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் தெரிவித்திருக்கிறார்.

Advertisement