#14YearsOfParuthiveeran காசி படத்தை பார்த்துவிட்டு வந்த நடிகனாகும் ஆசை, தந்தையின் 6 மாத கேடு - கார்த்தி நடிகரான கதை.

By Rajkumar · 23/2/2021

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அமீர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கினார். அதேபோல இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி இன்றோடு (பிப்ரவரி 23) 14 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருந்த கார்த்தியை இன்று ஒரு மிகப்பெரிய நடிகனாக மாற்றிய இந்த படத்தில் கார்த்தி வந்தது ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம்.

நடிகர் கார்த்திக்கு முதன் முதலில் படத்தில் இயக்குனராக வேண்டும் என்பது தான் கனவு. பின் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆய்த எழுத்து படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தார். அதனால் தான் இவர் அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சிவகுமார் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அளித்திருந்தார். அதில் அவர் நடிகர் கார்த்தி சினிமாவிற்கு போவேன் என்று அடம் பிடித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, சின்ன வயதில் இருந்தே கார்த்திக்கு சினிமாவில் தான் அதிக ஆர்வம். ஒரு முறை அவன் லீவுக்காக சென்னைக்கு வந்து இருந்தான். அப்போது விக்ரமோட காசி படம் வெளியாகி இருந்தது. அந்த படத்தை பார்த்து விட்டு அவனுடைய மைன்ட் செட்டு ஃபுல்லா சினிமா துறை என்று முடிவு செய்துவிட்டான். வெளிநாட்டுக்கு படிக்க போக மாட்டேன்னு சொன்னான். நான் என்ன பாவம் பண்ணுனேன். போய் படி படின்னு சொல்றீங்களே. நான் எதை நோக்கி போக நினைக்கிறேன். ஆனால், இப்படி நீங்க பண்றீங்களேன்னு சொன்னான்.

உடனே நான் உங்க அண்ணனுக்கு நடிக்கணும்னு ஆசை இல்லை. ஆனால், அவனுக்கு வாய்ப்பு தானா தேடி வந்தது. உனக்கு ஆசை இருக்கு. ஆனால், உனக்கு வாய்ப்பு வரல. இயக்குனர் பாலா, சங்கர் யாராவது வந்து ஆறு மாசத்துக்குள்ள உன்னை ஹீரோவாகுக்கிறேன் என்று சொல்ல சொல்லு நான் இப்போவே பாஸ்போர்ட்டை கிழித்துப் போட்டுறேன் என்று சொன்னேன். உடனே அவன் படிக்க வெளிநாட்டிற்கு சென்று விட்டான். வெளிநாட்டுக்கு போய் படிப்பை முடித்துவிட்டான்.

மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம். ஆனால், அவன் இந்தியா தான் என்னுடைய நாடு, சினிமா தான் என்னுடைய உலகம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டான் என்று கூறினார். தற்போது நடிகர் கார்த்தி அவர்கள் சுல்தான் என்ற படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவகிறார்.

behindtalkies AMP · Quick view
View full