70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : பொன்னியின் செல்வன் வாங்கிய 4 விருதுகள்-எந்த பிரிவில் தெரியுமா?

By subhashini · 16/8/2024

நான்கு தேசிய திரைப்பட விருதுகளை பொன்னியின் செல்வன் படம் வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வருடம் வருடம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு தான் தொடங்கி இருந்தார்கள். தற்போது 70 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் விருதுகளை வாங்கும் படங்களின் பட்டியல் தான் வெளியாகி இருக்கிறது. இந்த வருடம் அதிகமான விருதுகளை காந்தாரா படம் தான் பெற்று இருக்கிறது. தமிழில் பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம் படங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். இவருடைய படைப்புகளில் நீண்டகால கனவு படமான பொன்னியின் செல்வன் படம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்திருந்தது.

70வது தேசிய விருது:

இந்த படத்தில் சியான் விக்ரம்- ஆதித்ய கரிகாலன் ஆகவும், கார்த்தி- வந்தியத்தேவனாகவும், ஜெயம்ரவி- ராஜராஜ சோழன் ஆகவும், திரிஷா- குந்தவை ஆகவும், ஐஸ்வர்யா-நந்தினி மற்றும் ஊமை ராணியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் படத்தில் பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு,சரத்குமார், பார்த்திபன் உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தின் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றி இருந்தார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இரண்டு பாகங்களாக எடுத்திருந்தார். இந்த படத்தினுடைய இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. முதல் பாகமே 500 கோடிக்கு மேல் வசூலில் வாரி குவித்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டது. தமிழ் சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் கொடுத்திருந்தார்.

பொன்னியின் செல்வன் கிடைத்த விருது :

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் முதல் பாகம் வென்றிருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைத்த இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்திருக்கிறது. பின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ரவிவர்மன் வாங்கி இருக்கிறார்.

திருச்சிற்றம்பலம் கிடைத்த விருது :

இது தவிர சிறந்த ஒலி அமைப்புக்கான விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு கிடைத்திருக்கிறது. இப்படி 4 விருதுகளை பொன்னியின் செல்வன் படம் தட்டி தூக்கி இருக்கிறது. இதை தொடர்ந்து தனுஷின் திருச்சிற்றம்பலம் இரண்டு விருதுகளை பெற்றிருக்கிறது. அதில் சிறந்த நடிகையாக நித்யா மேனன் கிடைத்திருக்கிறது. சிறந்த நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணனுக்கு மேகம் கருக்காதா என்ற பாடலுக்காக தேசிய விருது கிடைத்திருக்கிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full