800 படத்துக்கு இலங்கையில் எழுந்த எதிர்ப்பு. நல்ல வேள விஜய் சேதுபதி இந்த படத்துல நடிக்கல.

By Ashok · 13/9/2023

800 படத்தில் இடம் பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய வார்த்தையை நீக்க வேண்டும் என்று இலங்கையில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்று உருவாகி இருக்கிறது. பெரும் பொருட் செலவில் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தை மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. ஆனால், கொரோனா தொற்று காரணமாகவும், பல்வேறு சர்ச்சைகள் காரணமாகவும் இந்த படத்துக்கான பணிகள் தள்ளிக்கொண்டே போனது. பின்னர் இந்த படத்திற்கு ‘800’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அதற்கான போஸ்டரும் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் விஜய் சேதுபதி அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போன்றே காணப்பட்டார்.

800 படம்:

ஆனால், இந்த படத்தின் மோஷன் போஸ்டருக்கே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழர் என்றாலும் அவர் சிங்களர்களின் பக்கமே நிற்கக் கூடியவர். இதனால் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். பின் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் விஜய் சேதுபதி. மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மதுர் மிட்டல் நடித்து இருக்கிறார். இவர் வேறு யாரும் இல்லை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதை வாங்கிக்கொடுத்த ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்தின் மூலம் மக்கள் மில்லியனர் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய வசனம்:

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மகிமா நம்பியார், நரேன், நாசர், வேலராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும், சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. இந்த ட்ரெய்லரில், குடியுரிமையே இல்லாத கொத்தடிமை கூட்டத்தில் இருந்து வந்தவர்களுக்கு குடிமகன் என்று அங்கீகாரம் கிடைப்பதை கஷ்டம். இன்னைக்கு நாடே அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு ஒரு தோட்டக்காட்டான் வளந்துருக்கான் என்று நாசர் பேசியிருக்கும் வசனம் இடம் பெற்றிருக்கும்.

இலங்கையில் எதிர்ப்பு :

தோட்டக்காட்டான் என்பது இலங்கையில் வாழும் மலையக தமிழர்களை கிண்டலாக குறிக்கும் சொல்.
இந்நிலையில் இது தொடர்பாக அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும் இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுசெயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அவர்கள் 800 படத்தின் இயக்குனருக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார்.

இயக்குனர் பதில்:

அதில் அவர், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தை எடுப்பதற்கு பாராட்டுகள். அதே வேளை '800' படத்தின் டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ள 'தோட்டக்காட்டான்' என்ற வார்த்தையால் எங்கள் மலையக சமூகத்தினர் இடையே ஏற்பட்டுள்ள மன வருத்தத்தை எடுத்துரைக்க கடமைப்பட்டு உள்ளேன். இந்த வார்த்தை அவர்களிடையே சிறிய சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வார்த்தைக்கு பதிலாக 'மலையக தமிழன்' என்ற வார்த்தையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். இதை பார்த்த படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி, மலையக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து '800' படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வார்த்தை நீக்கப்படும் என்று பதில் அளித்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full