வைபவ் சூர்யவன்ஷியை இப்படி காத்திருக்க வைப்பது ஏன்?" - இந்திய அணிக்கு ஏபி டி வில்லியர்ஸ் முக்கிய ஆலோசனை!

'வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு எப்போது?'... அயர்லாந்து தொடரிலேயே அறிமுகம் செய்திருக்க வேண்டும்; ஏபி டி வில்லியர்ஸ் ஆதங்கம்!

By S.Dhilip Kumar · 3/7/2026

வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஏபி டி வில்லியர்ஸின் கேள்வி

இந்தியாவின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் போதிய வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு ஒரு போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய டி வில்லியர்ஸ், இது தவறவிடப்பட்ட ஒரு முக்கிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார்.

'அயர்லாந்து தொடர்தான் சரியான மேடை'

வைபவ் சூர்யவன்ஷிக்கு சர்வதேச கிரிக்கெட்டின் சூழலை அறிமுகப்படுத்த அயர்லாந்து தொடர் மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும் என்று டி வில்லியர்ஸ் கூறினார். "வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு எப்போது கிடைக்கும்? என்ற கேள்விதான் எனக்கு எழுகிறது. அயர்லாந்து தொடர்தான் அவரை சர்வதேச கிரிக்கெட்டில் களமிறக்க மிகவும் சரியான சந்தர்ப்பம் என்று நான் நினைத்தேன். அந்த தொடரில் அவருக்கு ஒரு போட்டியில்கூட வாய்ப்பு கிடைக்காதது வருத்தமளிக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

ஐபிஎல் ஃபார்முக்கு பரிசாக வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்

ஐபிஎல் தொடரில் அச்சமின்றி விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அதிரடியாக ரன்கள் குவித்தார். அந்த ஃபார்மை கருத்தில் கொண்டு அவரை உடனடியாக இந்திய அணியில் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று டி வில்லியர்ஸ் வலியுறுத்தினார். "அவர் ஐபிஎல்லில் வெளிப்படுத்திய ஆட்டத்துக்குப் பிறகு, அவரை நேரடியாக சர்வதேச கிரிக்கெட்டில் சோதித்துப் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அந்த நம்பிக்கையை அணி நிர்வாகம் கொடுத்திருக்க வேண்டும்" என்றார்.

குறைந்த தரவரிசை அணிக்கு எதிராக அனுபவம் கொடுக்கலாம்

அயர்லாந்து போன்ற ஒப்பீட்டளவில் குறைந்த தரவரிசை அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்தார். "அயர்லாந்து போன்ற அணிக்கு எதிராக விளையாடும்போது, இளம் வீரர்களுக்கு சர்வதேச அனுபவம் கிடைக்கும். அப்படிப்பட்ட சூழலில் அவரை 'ஆழமான நீரில்' இறக்கி அவரது திறமையை சோதித்துப் பார்த்திருக்கலாம். அது அவரது எதிர்கால வளர்ச்சிக்கும் உதவியிருக்கும்" என்று அவர் கூறினார்.

இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்குமா?

அயர்லாந்து தொடரில் வாய்ப்பு தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷிக்கு, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி வாய்ப்பு வழங்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. ஏற்கனவே பல முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் வைபவை உடனடியாக இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஏபி டி வில்லியர்ஸும் அதே கருத்தை முன்வைத்திருப்பது இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இளம் நட்சத்திரத்தின் சர்வதேச அறிமுகம் எப்போது நடைபெறும் என்பதை ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full