ஆசைப்பட்டு வாங்கின வீட்டை ஏலத்தில் விடுறாங்க- மனவேதனையில் புலம்பிய நடிகர் ராஜசேகரின் மனைவி

By subhashini · 13/9/2024

ராஜசேகரின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவரின் மனைவி தாரா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ராஜசேகர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருந்தார். பின் இவர் சின்னத்திரையில் நடிகராகவும் நடித்து இருந்தார். இதனிடையே இவர் தாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் நடிகர் ராஜசேகர் அவர்கள் 2019ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இறப்பதற்குள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான் இவரின் கடைசி ஆசையாம்.

இதனால் அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னை வடபழனியில் 500 சதுர அடியில் ஒரு பிளாட்டை வாங்கி இருந்தார். ஆனால், அந்த வீட்டில் குடியேறாமலேயே ராஜசேகர் இறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் மட்டுமே சில மணி நேரம் அந்த வீட்டில் வைக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. தற்போது உறவுகளின் ஆதரவு இல்லாத நிலையில் தனி மனுஷியாக வேதனையில் இருக்கிறார் தாரா. இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் சம்பாதித்த மொத்த பணத்தையும் குடும்பத்துக்காக செலவு செய்து விட்டார். அதோடு பேங்கில் மீதி பணம் கட்ட சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள் என்று கடந்த ஆண்டு பேட்டியில் கூறி இருந்தார்.

ராஜசேகர் மனைவி பேட்டி:

மேலும், கடன் கொடுத்த வங்கி ராஜசேகரன் வீட்டை ஏலத்தில் விட முயற்சித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ராஜசேகரன் உடைய ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் வந்தது. இது தொடர்பாக ராஜசேகரின் மனைவி தாரா பேட்டியில், பேங்கில் கடன் வாங்கும் போது அவருக்கும் எனக்கும் வயதாகிவிட்டது. அப்பவே அவரிடம் கடன் வாங்கி வீடு எல்லாம் வாங்க வேண்டாம். இருக்கிற கொஞ்ச காலத்தை வாடகை வீட்டிலேயே இருந்து போயிடலாம் என்று சொன்னேன். அவர் தான் கேட்கவே இல்லை. பேங்கில் எந்த அடிப்படையில் அவருக்கு கடன் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. என்னையும் ஜாயின்ட் போட்டு தான் லோன் வாங்கினார் .

https://www.youtube.com/watch?v=OqBxVOisEbk

வங்கியில் செய்த வேலை:

வீடு என் பெயரில் தான் பதிவானது. புதுசா வாங்கின வீட்டுக்கு குடியேற கூட இல்லை. அதுக்குள்ளே அவர் இறந்துவிட்டார். அவர் இருந்தும் பேங்கில் இருந்து வந்தார்கள். நிறைய பேப்பரில் கையெழுத்து வாங்கி வீடு உங்களுக்கு கிடைக்கிற மாதிரி செய்கிறோம் என்று சொன்னார்கள். நானும் மிச்ச கடன் எவ்வளவு இருக்கு என்று சொன்னால் வேலூரில் எனக்கு இருக்கிற ஒரு சொத்தை வித்தாவது கடனை அடைத்து அவர் ஆசைப்பட்டு வாங்கிய வீட்டில் குடியேறலாம் என்று நினைத்தேன். ஆனால், பேங்கில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நாட்கள் தான் ஆனதே தவிர என் வீட்டு விஷயத்தில் ஒரு நல்லதும் நடக்கவில்லை. நான் போய் கேட்கும் போதெல்லாம் சரியான பதிலும் கொடுப்பதில்லை.

வீடு நிலைமை:

கடைசியில் வீட்டை ஏலத்தில் வங்கி விடுவதாக தகவல் வந்தது. கடன் எவ்வளவோ அதை அடைத்து விட்டு மீதி பணத்தை தந்திடுவார்கள் என்று சொன்னார்கள். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. நான் மீதி எவ்வளவு கட்ட வேண்டியிருக்கு என்று சொல்லாமல் ஏலத்தில் விட முடிவெடுத்து இருக்கிறார்கள். எனக்கு பிள்ளைகள் என்று யாரும் இல்லை. கோர்ட்டில் இருந்து காலி செய்ய சொல்லி ஆர்டர் வாங்கிட்டோம் என்று சொன்னார்கள். ஆனால், அப்படி ஒரு ஆர்டர் எப்படி தந்தாங்க என்று தெரியவில்லை. என்னுடைய வீட்டு விஷயம் கிணற்றில் போட்ட கல்லு மாதிரியே இருக்கு. வங்கி அதிகாரிகள் சிலர் தங்களுக்கு வேண்டிய யாரோ ஒருவருக்கு வீட்டை தரணும் என்று முடிவு பண்ணிட்டாங்க என்று எனக்கு தோணுது.

வேதனையில் தாரா சொன்னது:

பேங்கில் கடன் வாங்கினால் அந்த பிரச்சினையை தீர்த்து வைக்க ஏதாவது ஒரு அமைப்பு இருக்கு என்று சொல்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. அப்படி ஒரு அமைப்பு இருந்தால் அங்கு கூட நான் போக தயார். நான் ஒன்னும் கடனை திருப்பி கட்ட மாட்டேன் என்று சொல்லவில்லை. இவ்வளவு வயதுக்குப் பிறகும் எனக்கு ஒரு வேலை கூட தர யோசிக்கிறார்கள். அதனால் கடனில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தள்ளுபடி பண்ணி கொடுத்தால் மீதி கடனை கட்டுகிறேன் என்று சொன்னேன். அதை செய்ய யாருமே தயாராகவும் இல்லை, முன் வரவும் இல்லை என்று மன உளைச்சலில் தாரா பேசியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full