கொரோனாவினால் உலகமே திண்டாடி கொண்டு இருக்கிறது. கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்கள். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல பேர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர், ஒளிப்பதிவாளர் ஆன நடிகர் அருள்தாஸ் அவர்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் சினிமாத்துறை முடங்கியுள்ளது. இதனால் தமிழ் சினிமாவைச் சேர்ந்த சில நடிகர்கள் தங்களின் படத்தின் சம்பளத்தைக் கூட குறைத்துக்கொண்டு நடிக்க சம்மதித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபலமான நடிகர் அருள்தாஸ் டிசம்பர் மாதம் வரை தனக்குச் சம்பளம் வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, நான் மதுரையிலிருந்து சென்னைக்கு சினிமா கனவுகளோடு வந்தேன். பின் சினிமாவில் உதவி கேமராமேன் ஆனேன். அடுத்து கேமராமேனாக சில காலம் பணி புரிந்தேன். பிறகு நடிகனாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனேன்.

Advertisement

நான் மகான் அல்ல படத்தின் மூலம் தான் என்னுடைய திரை பயணத்தை தொடங்கினேன். பின் படிப்படியாக முன்னேறி தற்போது பிசியான நடிகனாக இருக்கிறேன். அதற்குக் காரணம் எனது இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் திரைப்படத்துறை நண்பர்கள் தான். இந்த தருணத்தில் நான் அவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். வாய்ப்புக் கொடுத்தது இயக்குனர்கள் என்றாலும் எனக்குச் சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்கள் எனும் முதலாளிகள் தான்.

இன்று என் வாழ்க்கையில் இருப்பிடம், உணவு, உடை, வாகனம் என அனைத்து வசதிகளை தந்தது முதலாளிகள் தான். தற்போது உலகம் முழுக்க ‘கோவிட்-19’ என்ற கொடிய வைரஸ் பரவலால் நமது திரைத்துறையில் பல தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இழந்து திண்டாடி வருகிறார்கள். இவர்களுக்கு பல பிரபலங்கள் உதவி செய்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நானும் என்னைச் சுற்றி இருக்கும் திரைத்துறை நண்பர்கள் மற்றும் முகம் தெரியாத பலருக்கும் என்னால் இயன்ற வரை உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கிறேன். மேலும், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த பொருளாதாரச் சரிவுகளால் வருகிற சில மாதங்களுக்குச் சினிமா எடுப்பதும் அதை வெளியிடுவதும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த சிரமமான காரியமாக இருக்கும்.

Advertisement

அதை மனதில் கொண்டும், தயாரிப்பாளர்கள் நலன் கருதியும் சில நடிகர்களும், இயக்குனர்களும் அவர்களது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாகக் கூறி உள்ளார்கள். அதேபோல இந்த வருடம் 2020 டிசம்பர் மாதம் வரை நான் புதிதாக நடிக்கும் அனைத்துப் படங்களுக்கும் சம்பளம் எதுவும் வாங்காமல் என் உழைப்பை முழுமையாக என் முதலாளிகளுக்கும் என் இயக்குனர் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கைம்மாறாக இதைச் செய்வதில் உள்ளபடியே எனக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement