ஐஸ்வர்யாவால் சிக்கலில் சிக்கிய தனுஷ் - நீதி மன்ற முடிவுக்காக காத்திருக்கும் தனுஷ்.

By Arun · 2/8/2022

நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் எச்சரிக்கை வாசகம் முறையாக இல்லை என தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ், இயக்குனர் வேல்ராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் நடவடிக்கையை தொடரவில்லை என மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்சார் போர்டு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

நீதி மன்றம் தனுஷ் மீதும், ஐஸ்வர்யா மீதும் நடவேடிக்கை எடுக்க உத்தரவிட்டது :

இதனைத் தொடர்ந்து, தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும், மேற்கொண்டு தவறு நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும், தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் பாதிப்பால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு ஏற்படுவதாக தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்துதல் தடை சட்ட விதிகளை மீறியதாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தார்.

ஐஸ்வர்யா ரஜினி காந்த் வழக்கை ரத்து செய்யகோரி மனு :

இதில் விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இதை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று இருவரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தள்ளிவைப்பு :

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணை வந்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாளை ஆஜராக விலக்கு அளித்து, வழக்கை இறுதி விசாரணைக்காக ஆகஸ்ட் 10-ம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

தனுஷ் வழக்கை ரத்து செய்யகோரி மனு :

இதற்கிடையே வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் தனுஷும் வழக்கு தொடர இருப்பதாகவும், தற்போது அவர் "தி கிரே மேன்" படப் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதால், சென்னை திரும்பிய பிறகு, மனுத் தாக்கல் செய்யவிருப்பதாகவும், அந்த மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full