விஜய்யை விசாரணைக்கு கூட்டிட்டு போனாங்களே, அதை யாராவது கேட்டர்களா ? மன்சூர் அலிகான் கேள்வி

By subhashini · 28/2/2022

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

இதனிடையே சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் மேற்கே உள்ள பகுதியில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு வீடு உள்ளது. இந்த வீடு அரசு புறம்போக்கு நிலம் 2500 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டி இருப்பதாகவும், இங்கு பல ஆண்டுகளாக இவர்கள் இருந்து வந்ததாகவும் புகார் எழுந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதன் காரணமாக அரசு நிலத்தை மீட்கும் பொறுப்பில் சில மாதங்களுக்கு முன் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலி வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடலை போட ஒரு பொண்ணு வேணும் படம்:

இந்நிலையில் கடலை போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் விஜய் குறித்து சில விஷயங்களை பேசி இருப்பது தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் ஆனந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கடலை போட ஒரு பொண்ணு வேணும். இந்த படத்தில் விஜய் டிவி பிரபலம் அசார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்திருக்கிறார். மேலும், இவர்களுடன் யோகி பாபு, நாஞ்சில் சம்பத் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்தை ராபின்சன் தயாரித்திருக்கிறார்.

கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தின் விழா:

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் அசார், மன்சூரலிகான், நாஞ்சில் சம்பத் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் பேசியது, கடலை போட ஒரு பொண்ணு வேணும் டைட்டிலே சூப்பராக இருக்கிறது. இப்படி எல்லாம் டைட்டில் வைத்தால் தான் இளைஞர்கள் சினிமாவுக்கு வருகிறார்கள். நான் ராஜாதி ராஜா, குலோத்துங்க சோழன் போன்று பட டைட்டில் வைத்த போது எல்லோரும் திட்டினார்கள்.

மன்சூர் அலிகான் அளித்த பேட்டி:

ஆனால், அந்த படம் வெற்றி பெற்றது. இப்போதெல்லாம் ஒரு படத்திற்கு தான் கூட்டம் வருகிறது. விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு வெயிட் பண்ணுகிறார்கள். அனிருத், சிவகார்த்திகேயன் தான் தமிழ் சினிமாவில் கலக்குகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் பெரிய படம் எடுத்தால் தான் மக்கள் பார்க்க வருகிறார்கள். சின்ன படத்திற்கு மக்கள் வருவதே இல்லை. அதேபோல் மத்திய அரசு மக்களிடம் வரி போட்டு எல்லாவற்றையும் பிடுங்கி வருகிறது. மக்களிடம் பணம் இல்லை, மக்கள் சந்தோஷமாக இருந்தால் தானே படத்திற்கு வருவார்கள்.

விஜய் குறித்து மன்சூர் அலிகான் கூறியது:

விஜய் சூட்டிலிருந்து வரி ஏய்ப்பு விசாரணை என கூட்டிட்டு போனார்களே, அதை யாராவது கேட்டார்களா? என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. நான் மட்டும் தான் இதை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். ஆனால், அதற்கான பதிலும் இன்னும் கிடைக்கவில்லை. எல்லோரும் இணைந்து போராட வேண்டும். அப்போது தான் எல்லா கேள்விக்கும் பிரச்சனைக்கும் வழி பிறக்கும். அதே போல் படத்தில் ஹீரோ, ஹீரோயினி நன்றாக நடித்துள்ளார்கள். இந்த கடலை போட ஒரு பொண்ணு வேணும் படம் ஜெயிக்க வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full