நான் அதற்கு ஆதரவானவன் இல்லை - குவிந்த விமர்சனத்தால் நடிகர் ரஞ்சித் விளக்கம்

By subhashini · 11/8/2024

ஆணவக் கொலை தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு நடிகர் ரஞ்சித் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரஞ்சித். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் படம் ‘குழந்தை C/O கவுண்டம் பாளையம்’. நாடக காதலை மையமாக வைத்து இந்த படத்தை நடிகர் ரஞ்சித் எடுத்து இருக்கிறார்.

இந்த படத்தினுடைய ட்ரைலர் வெளியாகியதிலிருந்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாகவே நடிகர் ரஞ்சித்தின் கவுண்டபாளையம் படம் குறித்த செய்திகள் தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதோடு நடிகர் ரஞ்சித் அவர்கள் மறைமுகமாக வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களை தாக்கி பேசியிருக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது.

குழந்தை C/O கவுண்டம் பாளையம்:

மேலும், பல சர்ச்சைகளுக்கு பிறகு ஆகஸ்ட் 9ம் தேதி கவுண்டபாளையம் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தினுடைய முதல் காட்சி பார்த்துவிட்டு நடிகரும் இயக்குனருமான ரஞ்சித் அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், என்னுடைய படத்திற்கு எந்த ஒரு ஜாதி பெயரையும் வைக்கவில்லை. கவுண்டம்பாளையம் என்பது ஒரு சட்டமன்ற தொகுதி. அது ஒரு ஊருடைய பெயர். அதைத்தான் படத்திற்கு வைத்திருக்கிறேன்.

ஆணவக்கொலை குறித்து சொன்னது:

பார்வையாளர்கள் உடைய கண்ணோட்டம் தான் அப்படி இருக்கிறது. என் மீது பழி சுமத்த வேண்டும் என்று தேவையில்லாத சிலர் செய்யும் வேலை இது. இந்தப் படத்தில் ஆணவ படுகொலை என்பது வன்முறையோ, கலவரமோ கிடையாது என்பதை தான் சொல்லியிருக்கிறேன். நம்முடைய ஒரு பொருள், பைக்கை ஒருவர் தூக்கி சென்றால், கோபமாக போய் அவரை நாம் அடிப்பது இல்லையா? அதே மாதிரி தான் பார்த்து பார்த்து நம்முடைய பிள்ளைகளை வளர்த்து யாரோ ஒருவர் கூட்டிக் கொண்டு போகும் போது அவர்கள் மீது பெற்றோர்களுக்கு வரும் கோபம்.

ரஞ்சித் பேட்டி :

பிள்ளைகள் மீது வரும் அக்கறையோட வெளிப்பாடு தான் இது. இது எல்லாம் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் செயல் தான். மற்றபடி இது வன்முறையோ, கொலையோ கிடையாது என்று கூறியிருந்தார். இப்படி நடிகர் ரஞ்சித் கூறி இருந்ததற்கு பலரும், இவர் ஆணவ படுகொலைக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று மோசமாக விமர்சித்து பேசி இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் ரஞ்சித், நான் சொன்ன கருத்தை வேறு மாதிரியாக திரித்து சொல்கிறார்கள். என் மீது எதற்கு இவ்வளவு வன்மம்? தயவுசெய்து என் மீது வன்மத்தை கொட்டுவதை நிறுத்துங்கள்.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

ஆணவ கொலை குறித்து சொன்னது :

யாராவது ஆணவ கொலைக்கு ஆதரவு கொடுப்பார்களா? நான் கொடுக்க மாட்டேன். நான் ஆணவ கொலைக்கு ஆதரவாக இல்லை. நான் சொல்ல வந்த கருத்தை திருத்தி திருத்தி வேறு மாதிரி மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள். எதற்கு என் மீது இவ்வளவு வன்மம் என்று தெரியவில்லை. எந்த உயிரையும் சாவனும் என்று நினைக்கும் அளவிற்கு நான் கொடூரமானவனா? நான் எந்த இடத்திலுமே ஆணவ கொலைக்கு ஆதரவானவர் என்று சொல்லவில்லை என்று பேசி இருந்தார். இப்படி நடிகர் ரஞ்சித் முன்பு அளித்த பேட்டிக்கும் தற்போது அளித்த பேட்டிக்கும் மாற்றி பேசி இருப்பதை தான் நெட்டிசன் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full