ஏழை வயிற்றில் அடித்த நடிகர் சூரி, மதுரை மருத்துவமனையில் நடந்த சம்பவம்- பொதுமக்கள் ஆதங்கம்
நடிகர் சூரியின் உணவகத்தால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் தினமும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள், புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனைக்கு மதுரையில் இருக்கும் மக்கள் மட்டும் இல்லாமல், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வருகிறார்கள்.
மேலும், மதுரையில் நட்சத்திர நண்பர்கள் என்ற அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பல சமூக சேவைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று தான் ராஜாஜி மருத்துவமனைக்கு மதிய உணவு வழங்குவது. இதுவரை இவர்கள் 200 நாட்களுக்கு மேல் இந்த மருத்துவமனைக்கு மதிய உணவு வழங்கி வந்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் மேற்கொண்டிருந்தார்கள்.
மதுரை சேவை அமைப்பு:
இந்த நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியர் உட்பட்ட அதிகாரிகள் எல்லாம் மருத்துவமனையில் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகளை விதித்திருந்தார்கள். இந்த நிலையில் இன்று வழக்கம்போல நட்சத்திர நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுக்கு உணவு வழங்க வந்து இருந்தார்கள்.
மருத்துவமனையில் போட்ட விதிமுறை:
அப்போது மருத்துவமனை பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து புதிதாக போட்ட விதிமுறைகளை கூறி இருக்கிறார்கள். இதனால் மருத்துவமனையில் உணவை எதிர்பார்த்துக் காத்திருந்த 200 க்கும் மேற்பட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். அதோடு மருத்துவமனை வளாகத்தில் நடிகர் சூரியின் அம்மன் உணவகமும் இருக்கிறது. தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படுவதாக சொல்லி அவர்களை வெளியே அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் அளித்த பேட்டி:
மேலும், இது குறித்து பொதுமக்கள், எங்களைப் போன்று வறுமையின் பிடியில் உள்ள குடும்பத்தினர்கள் சிகிச்சை பெற அரசு மருத்துவமனையை நம்பி தான் வருகிறோம். ஆனால், இங்கு விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் மருத்துவமனைக்கு வந்து கொடுக்கும் உணவுகளை நம்பி தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.
அரசு மருத்துவமனையில் தன்னார்வலர்களுக்கு தடை; சூரியின் அம்மன் உணவகம் தலையீடு!#Soori #kottukkaali #amman #madurai #trendingvideo #KolkataDoctorCase pic.twitter.com/uIDj1AY4NB
— Tamil The Hindu (@TamilTheHindu) August 30, 2024
சூரியின் உணவகம் குறித்து சொன்னது:
அதுமட்டுமில்லாமல் நடிகர் சூரியின் அம்மன் உணவகம் பாதிக்கப்படும் என்பதால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காமல் விரட்டுகிறார்கள். மாவட்ட நிர்வாகம், தலையிட்டு எங்களுக்கு உணவு வழங்கும் நபர்களை மருத்துவமனை வளாகத்தின் உள்ளே வந்து உணவு அளிக்க அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற அமைப்புகள் மூலம் கிடைக்கும் உணவுகளை நோயால் பாதிக்கப்பட்டவர்களும், அவைகளை சார்ந்த குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தற்போது இந்த சம்பவம் தான் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.