கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா தயாரிப்பாளர்கள். சம்பளத்தை குறைத்துக்கொண்ட முதல் தமிழ் நடிகர். எவ்வளவு தெரியுமா?

By Rajkumar · 5/5/2020

உலகமெங்கும் தற்போது 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், '144' போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

'கொரோனா' பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு பேருதவி செய்திருக்கிறார்.

'சுக்ரன்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இதனைத் தொடர்ந்து 'டிஷ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், வேலாயுதம்' போன்ற பல படங்களுக்கு இசையமைத்தார் விஜய் ஆண்டனி. ஒரு இசையமைப்பாளராக மட்டுமே தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த விஜய் ஆண்டனி, அடுத்ததாக ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவெடுத்தார்.

https://twitter.com/LMKMovieManiac/status/1257542841099677698

2012-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளி வந்த திரைப்படம் 'நான்'. இந்த படத்தினை ஜீவா ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடித்திருந்தார். இது தான் விஜய் ஆண்டனி கதையின் நாயகனாக நடித்த முதல் தமிழ் திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து 'சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன்' என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் விஜய் ஆண்டனி.

கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளி வந்த திரைப்படம் 'கொலைகாரன்'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்போது 'அக்னிச் சிறகுகள், தமிழரசன், காக்கி' என் மூன்று தமிழ் திரைப்படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. இம்மூன்று படங்களுமே இந்த ஆண்டு (2020) வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தது. இப்போது கொரோனா லாக் டவுன் என்பதால், இம்மூன்று திரைப்படங்களின் அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படங்களை ரிலீஸ் செய்ய இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்பதால், தன்னை நம்பி இத்திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன் வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி விட்டதாக தகவல் வெளி வந்திருக்கிறது. இதன் மூலம் ஒரு படத்துக்கு ரூ.1 கோடி அவரது சம்பளத்தில் இருந்து குறைக்கப்படுமாம்.

இதனால் அம்மூன்று படங்களின் தயாரிப்பாளர்களும் தங்களது படங்களின் மொத்த பட்ஜெட்டை குறைத்து, வெகு விரைவில் அவர்களின் படங்களை எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வெளியிட முடியும் என்று விஜய் ஆண்டனி நம்புகிறாராம். இது தொடர்பாக 'அக்னிச் சிறகுகள்' படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில் "விஜய் ஆண்டனி செய்த விஷயம் அனைவரும் பாராட்ட வேண்டிய, தமிழ் சினிமாவுக்கு முன்னுதாரணமாக இருக்க போகும் நடவடிக்கை. அவரை போலவே மற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து, அனைத்து தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full