விஷால் வீட்டில் கல் எரிந்தது ஏன் ? சிக்கிய 4 பேர் கொடுத்த பகீர் வாக்குமூலம்.
நடிகர் விஷாலின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே. ஆனால், இவர் அதற்கு முன்னரே 1989ல் நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளி வந்த ‘ஜாடிக்கேத்த மூடி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் செல்லமே என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் வெளிவந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். அனைவரும் எதிர்பார்த்து இருந்த விஷாலின் வீரமே வாகை சூடும் படம் பிப்ரவரி மாதம் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.
விஷால் நடிக்கும் படம்:
இதனை அடுத்து விஷால் அவர்கள் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து நடிகர்கள் ராணா புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இந்தப் படத்தின் போஸ்டர், டீசர் எல்லாம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஷால் வீட்டின் மீது கல் வீச்சு:
நடிகர் விஷால் அவர்கள் அண்ணா நகர் 12வது தெருவில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 26 ஆம் தேதி சில மர்ம நபர்கள் காரில் வந்து விஷாலின் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பித்துச் சென்றனர். இதனால் விஷால் வீட்டின் முதல் மாடியில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து இருக்கிறது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இதனை அடுத்து விஷாலின் மேலாளர் அரிகிருஷ்ணன் அவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆதாரங்களாக வைத்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்த போது விஷால் வீட்டில் இல்லை. அவர் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருந்தார்.
விஷால் தரப்பில் அளித்த புகார்:
அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்று விஷாலின் மேலாளர் அளித்த புகாரின்படி சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் அந்த மர்ம நபர்களை தேடி வந்தது. இந்த நிலையில் சிசிடிவி கட்சியில் மர்ம நபர்கள் வந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் நான்கு நபர்களை கைது செய்திருக்கிறது. பின் அவர்களிடம் விசாரணையும் நடத்தி இருந்தது. விசாரணையில் இவர்கள் மீன் ஏற்றுமதி தொழில் செய்யும் கொளத்தூரை சேர்ந்த ப்ரவீன் குமார், ராஜேஷ் மற்றும் ஹோட்டல் நடத்தி வரும் அண்ணா நகரை சேர்ந்த சபரீஸ்வரன், புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிவில் என்ஜினியர் மணிரத்னம் என்பது தெரிய வந்திருக்கிறது.
தீவிர விசாரணையில் போலீஸ்:
இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து சம்பவத்தன்று மது அருந்திவிட்டு போதையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நண்பர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது விஷால் வீட்டருகே காரில் வந்து கொண்டிருந்தபோது தகராறு முற்றி ஒருவரை ஒருவர் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் தான் தெரியாமல் ஒரு கல் நடிகர் விஷால் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மேல் பட்டு விட்டதாக கூறியிருந்தனர். இதனை அடுத்து இவர்களின் வாக்குமூலம் உண்மையா? இதில் வேறு ஏதாவது சதி இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.