கமல்ஹாசன், சூர்யாவைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் டி.வி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். அந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, நடிகர் விஷால் கதாநாயகனாக நடிப்பதைத் தாண்டி, பல்வேறு பொது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகிறார். படங்களில் நடிப்பதைவிடத் தீவிரமாக நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றார்.

Advertisement

அதையடுத்து, ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் போட்டியிட முயற்சி மேற்கொண்டார். இருப்பினும், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, கடந்த 20 நாள்களுக்கு முன்னதாக அவரது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் இயக்கம்’ என மாற்றினார். இந்த நிலையில், கமல்ஹாசனைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆகிறார் விஷால். ‘இரும்புத்திரை’ படத்தின் வெற்றிக்குப்பிறகு சண்டக்கோழி 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் விஷால். தெலுங்கில் லக்‌ஷ்மி மன்சு தொகுத்து வழங்கிய ‘மேமு செய்த்தாம்’ நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பைத் தொகுத்து வழங்கவுள்ளார்.

இன்னும் அந்த நிகழ்ச்சியின் பெயர் அறிவிக்கப்படவில்லை. அந்த நிகழ்ச்சிக்கான 11 விநாடிகள் ஓடக்கூடிய ப்ரோமோவை சன் டி.வி அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில், ‘விதைத்தவன் தூங்கலாம். விதைகள் தூங்காது. அன்பை விதைப்போமா…’ என்று கேள்வி எழுப்புகிறார்.

Advertisement
Advertisement