சில்க் ஸ்மிதாவிடம் இருந்து வந்த கடைசி கால். இறப்பிற்கு முன் நடந்த ரகசியத்தை உடைத்த நடிகை அனுராதா.

By Rajkumar · 10/12/2019

தமிழ் சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. இவர் ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். இந்த உலகை விட்டு சில்க் ஸ்மிதா மறைந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார். காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல், தனக்கென ஒரு ஸ்டைல் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை சில்க். சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான அனுராதா அவர்கள் சில்க் ஸ்மிதாவின் கடைசி நிமிடங்களை பற்றி பேசியுள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை சில்க் ஸ்மிதா அவர்கள் தன்னுடைய 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். ஒரு காலத்தில் இவருடைய கால்ஷிட்டிற்காக இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பல பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'டர்ட்டி பிக்சர்' என்று படமாக எடுத்து உள்ளார்கள். இப்படி இருந்தும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் எவ்வளவோ சொல்லப்படாத விசயங்கள் மர்மமாகவே இன்றளவும் உள்ளது.

இதையும் பாருங்க : சபரிமலைக்கு கிளம்பிய சிம்பு. வைரலாகும் புகைப்படம். ஆனால், 48 நாள் விரதத்தை முடித்தாரா ?

1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி சில்க் ஸ்மிதா அவர்கள் தற்கொலை செய்து கொண்டார். மேலும், ஸ்மிதா அவர்கள் காதல் தோல்வி, குடிப்பழக்கம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் இந்தியா முழுவதும் ஒரு பெரிய காட்டுத்தீ போல் பரவியது. இவருடைய இழப்பு ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை உலுக்கியது என்று சொல்லலாம். மேலும், சில்க்கின் இழப்பு அதிகமாக அவருடைய தோழி அனுராதவை தான் பாதித்தது என்று சொல்லப்படுகிறது. நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாகவே தான் அனுராதாவிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். அதில், சில்க் கூறியது, எனக்கு மனசு சரி இல்லை. ஒரு முறை உன்னை நேரில் சந்தித்து பேசவேண்டும் வரமுடியுமா என் வீட்டிற்கு என்று கேட்டு உள்ளார். ஆனால், அனுராதாவுக்கு அப்போது இருந்த சூழ்நிலை காரணமாக போகவில்லை என்று தெரிந்தது.

இது குறித்து நடிகை அனுராதா கூறியது, என் தோழி சில்க் இறப்பதற்க்கு நான்கு நாட்களுக்கு முன்னர் தான் என்னுடைய குடியிருப்பு பகுதிக்கு வந்து என்னுடைய குழந்தைகளுடன் கொஞ்ச நேரம் செலவிட்டு அவர் சென்றார். அதோடு அடுத்த சில நாட்களிலேயே நான் கன்னட படம் ஒன்றில் பாடல் காட்சிகளில் நடிப்பதற்காக செல்கிறேன் என்றும் என்னிடம் தெரிவித்திருந்தார். சில்க் இறப்பதற்கு முன் தினம் என்னை தொலைபேசியில் அழைத்து உன்னிடம் பேச வேண்டும் வர முடியுமா? என்று கேட்டாள். ஆனால், நான் என் பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்தேன். அது மட்டுமில்லாமல் என்னுடைய கணவர் சதீஷ் வெளிநாடு சென்றிருந்தார்.

அன்று தான் அவர் வீட்டுக்கு வருவதாகவும் கூறியிருந்தார். அதனால் தான் ஸ்மிதாவை நேரில் சந்திக்க முடியாமல் போனது. பின் நான் அவளிடம் மறுநாள் வந்து சந்திக்கிறேன் என்று கூறினேன். ஆனால், அடுத்த நாள் காலையில் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் எனக்கு வந்தது. இந்த தகவல் என் நெஞ்சை பிளக்கும் அளவிற்கு இருந்தது. அன்று ஸ்மிதாவின் அழைப்பை ஏற்று நான் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தால் சுமிதா இன்று உயிருடன் இருந்திருப்பார் என்று மனவேதனையுடன் அனுராதா தெரிவித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full