ஜெய் பீம் படத்துக்கு பின் அடுத்த கிளாசிக் படம் - அமரனை பாராட்டி ஜோதிகா சொன்ன தகவல்
அமரன் படம் குறித்து நடிகை ஜோதிகா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை.
அமரன் படம்:
தீபாவளிக்கு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து இருக்கிறது. மேலும், உலகம் முழுவதும் அமரன் படம் வசூலில் 200 கோடியை நெருங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நவம்பர் 1-ல் இருந்து 3ஆம் தேதி வரை உலக அளவில் வெளியான படங்களின் வசூல் பட்டியலில் அமரன் படத்தின் வசூல் தான் ஏழாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.
படம் குறித்த தகவல்:
தென்னிந்திய சினிமாவிலேயே அமரன் படம் தான் இந்த சாதனையை செய்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து அமரன் படத்தின் அடுத்து வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றிருந்தது. இதில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய் பல்லவிஆகியோர் ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்கள். மேலும், இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பிரபலங்கள் பாராட்டு:
இந்த நிலையில் அமரன் படத்தை பார்த்து சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டி இருந்தார்கள். பின் இது தொடர்பாக நடிகை ஜோதிகா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அமரன் படக்குழுவினருக்கு ஒரு சல்யூட். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, என்ன ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கி இருக்கிறார். ஜெய் பீம் படத்திற்கு பிறகு கிளாசிக் படம் என்றால் அமரன் தான். சிவகார்த்திகேயன் இந்த கதாபாத்திரத்திற்காக ரொம்பவே உழைத்திருப்பதை பார்த்திருக்க முடிகிறது.
ஜோதிகா பதிவு:
சாய்பல்லவி என்ன ஒரு நடிகை! கடைசி 10 நிமிடங்களில் என்னுடைய இதயத்தை உலுக்கி விட்டீர்கள். உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இந்து ரெபேக்கா வர்கீஸ், உங்களின் தியாகமும் நேர்மையான எண்ணமும் எங்களின் இதயங்களை தொட்டுவிட்டது. முகுந்த் வரதராஜன், ஒவ்வொரு குடிமகனும் உங்களை கொண்டாடுவதை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்களைப் போன்ற வீரமும் தைரியமும் கொண்டவர்களாகவே எங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறோம். ரசிகர்கள் தயவு செய்து இந்த வைரத்தை தவற விடாதீர்கள் என்று ரொம்ப எமோஷனலாக பதிவிட்டிருக்கிறார்.