உலகம் முழுவதும் டிரெண்டாகி வருகிறது #Metoo ஹேஷ்டேக். பெண்கள் மீதான பாலியல் சீண்டலுக்கும் வன்முறைக்கும் எதிராக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சமூகவலைதளத்தில் #Metoo ஹேஷ்டேக் ஆரம்பித்தது. தொடர்ந்து பெண்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் பற்றி சமூகவலைதளத்தில் எழுதத் தொடங்கினர். நடிகைகளும் இந்தப் பிரசாரத்தில் பங்கேற்றனர். நடிகை கஸ்தூரியும் தனது முகநூல் பக்கத்தில், #Metoo என்று பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.
கஸ்தூரிஎன் நட்பு வட்டத்தில் இருக்கும் ஆண்களில் பலர், ‘ஏதோ ஒரு பத்து, இருபது பேர் இந்த #Metoo ஹேஷ்டேக் பயன்படுத்துவாங்கனு நினைச்சோம். ஆனால், இத்தனை பேர் ஹேஷ்டேக் போட்டிருக்காங்களே. பெண்கள் இந்த அளவுக்குப் பாலியல் சீண்டல்களைச் சந்திச்சுட்டு இருக்காங்களா என நினைக்கும்போது ஷாக்கிங்கா இருக்கு’னு ஆதங்கப்பட்டாங்க. பெண்களை மதிக்கும் அவங்களுக்காக வருத்தப்படும் இப்படிப்பட்ட ஆண்களும் இருக்காங்க. ஆனால், இந்த ஹேஷ்டேக் முழுமையடையாமல் இருக்கு. ‘எனக்கும் பாலியல் தொல்லை நடந்திருக்கு’னு மட்டும்தான் பதிவு பண்றோம். அடுத்தகட்டம் என்ன? அதுக்கு எதிரான நம் எதிர்ப்பு என்ன என்பது மாதிரி இல்லை. அதனால்தான் என் ஃபேஸ்புக் பக்கத்தில், எனக்கும் அப்படி ஒரு சம்பவம் நடத்திருக்கு. மறுபடியும் அதே மாதிரி நடந்தபோது, சரியான பதிலடி கொடுத்தேன் எனப் பதிவுசெய்திருந்தேன்.
இந்த #Metoo ஹேஷ்டேக், பாலியல் வன்முறைக்கும் சீண்டலுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்டுது. பாலியல் வன்முறைக்கும் சீண்டலுக்கும் வித்தியாசம் இருக்கு. அதனால், இது ஒரு முழுமையற்ற போராட்டமாக இருக்குனு சொல்றேன். எல்லாப் பெண்களுமே ஏதோ ஒரு கட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்குறாங்க என்பதை வெளிப்படையா இந்தப் பிரசாரம் காட்டியிருக்கு. ஏதோ ஒரு கட்டத்தில் இந்த மாதிரி விஷயங்களைக் கடந்துவந்திருப்போம். இது பெண்களுக்கு மட்டும் நடக்கறதில்லே, ஆண்களுக்கும் நடக்குது.
சமீபத்தில், ராதிகா ஆப்தே, ‘திரைப்பட இயக்குநர்கள் தன்னை தவறான முறையில் அணுகினார்கள். நான் அவர்களைப் புறக்கணித்துவிட்டேன்’ என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலளிப்பதுபோல பேசியிருக்கும் இயக்குநர் ருத்ரன், “ராதிகா ஒன்றும் அழகியல்ல; வசீகரத் தோற்றமும் அவருக்கு இல்லை. அப்படியிருக்க யார் அவரை அழைத்தார் என்று அவர்தான் கூற வேண்டும்” என்று மோசமான வகையில் சொல்லியிருக்கிறார் ராதிகா ஆப்தே நடித்த ‘வெற்றிச்செல்வன்’ படத்தின் இயக்குநர் இவர்.
இதிலிருந்தே பெண்கள் குறித்து பெரும்பாலான ஆண்களின் மதிப்பீடு என்ன என்பதும், பெண்கள் நடத்தப்படும் விதமும் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. பிறகு எப்படி பாலியல் தொல்லைகள் குறையும்? ஹேஷ்டேக் மட்டும் போதாது; பெண்களின் குரல், இன்னும் வேகமாக ஓங்கி ஒலிக்க வேண்டும்.