மகன் இறந்த இரண்டே வாரத்தில் கணவரும் கொரோனாவால் இறப்பு- நடிகை கவிதாவைத் தொடரும் சோகம்

By Rajkumar · 30/6/2021

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர் .

பின்னணி பாடகர் எஸ்பிபி, இயக்குனர் தாமிரா, இயக்குநர் கே. வி ஆனந்த், காமெடி நடிகர் பாண்டு, நடிகர் மாறன், ஜோக்கர் துளசி, ஆட்டோகிராப் கோமகன், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்து உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இப்படி ஒரு நிலையில் பிரபல சினிமா மற்றும் சீரியல் நடிகையான கவிதா வீட்டிலும் கொரோனாவால் இரண்டு இறப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழில் கதாநாயகி முதல் அம்மா வேடம் வரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கவிதா.ஆரம்பத்தில் நாயகியாக நடித்த இவர் அம்மா, அக்கா என்று பல படங்களில் நடித்தார். தமிழில் கங்கா, நந்தினி போன்ற தொடர்களில் நடித்த இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை தொடரில் நடித்து வருகிறார். கொரோனா இரண்டாவது அலையில் இவரது கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் இவரது மகனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கடைசியில் அவரது மகன் சாய் ரூப் கடந்த ஜூன் 15ம் தேதி இறந்து போனார். மகன் இறந்து சில வாரங்களே ஆன நிலையில் தற்போது கவிதாவின் கணவரும் காலமாகி இருக்கிறார். தீவிர சிகிச்சையில் இருந்த அவரது கணவர் நேற்று (29/6/21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full