சாமி…
சொல்லுமா…
அர்ச்சனை என் பேருக்கு இல்ல, சாமி பேருக்கு..
எந்தச் சாமிக்கும்மா..
நம்ம தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு… அவர்தான் எனக்கு வேலை கொடுத்த சாமி…”
– உரையாடல் இப்படி முடிய, ஹேய்ய்ய்ய்… என்கிற குரல்கள் எழும்ப, புன்னகைக்கிறார், சின்னத்திரை பிரபலம் மகாலக்ஷ்மி.

Advertisement

ஐம்பது நாள் ஸ்டிரைக் ஒருவழியாக முடிவுக்கு வந்து, `படத்தைப் போடுங்கப்பா’ என தியேட்டருக்குப் போய் உட்கார்ந்தால், இந்த விளம்பரம்தான் முதலில் வருகிறது. தமிழக அரசின் சாதனை விளம்பரம். `விளம்பர மோகத்துல ஜெயலலிதாவையே விஞ்சிவிட்டார், ஈ.பி.எஸ்’ என்கிறார்கள் சிலர். `சீன் போனாகூடப் பரவால்ல, கொஞ்சம் லேட்டாவே போங்க; முடியலடா சாமி’ என்கிறார்கள் இன்னும் சிலர். எப்படியோ இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.

இந்த விளம்பரத்தில் நடித்த மகாலக்ஷ்மியிடம் பேசினோம்.

Advertisement

ரெண்டுநாளா விடிஞ்சதுல இருந்து பொழுது சாயுற வரைக்கும் இது குறித்த விசாரிப்புகள்தான். `எப்படி அந்த விளம்பரத்துல நடிச்சீங்க?’னு கேட்குறாங்க. `தமிழ்நாட்டுல நடக்கிறதையெல்லாம் பார்க்குறீங்கதானே, உங்களுக்கே மனசாட்சி இல்லையா?’னும் சிலர் கேட்டாங்க. நான் என்னங்க செய்வேன்… விளம்பரத்துல நடிக்கிறது என்னோட தொழில். `கவர்மென்ட் விளம்பரத்துல நடிக்கணும்னு கூப்பிட்டாங்க. நடிகர் ராம்கி சார் (நிரோஷா) இயக்கிய விளம்பரம் இது. `தாமரை’ உள்ளிட்ட நிரோஷா மேடம் நடிக்கிற சீரியல்கள்ல நடிக்கிறது மூலமா எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. ஆனா, இந்தமாதிரி `பழனிசாமி அய்யா பேருக்கு அரச்சனை’ங்கிற வசனம் எல்லாம் வரும்னு சத்தியமா அப்போ தெரியாது. அங்கே போனா பிறகுதான் வசனத்தைச் சொன்னாங்க. கேட்டப்போ எனக்கே ஒரு மாதிரியாதான் இருந்துச்சு. நெளிஞ்சேன்.

Advertisement

ஆனா, நடிக்கிறேன்னு சம்மதம் சொல்லிட்டு, கடைசி நிமிடத்துல மறுக்குறது எத்திக்ஸ் இல்லை. அதனால, அவங்க சொன்னதை நடிச்சுக் கொடுத்துட்டேன். அதுபோக, ஆளும் கட்சி தாங்கள் செய்ததைச் சொல்லி விளம்பரப்படுத்திக்கிறது அரசியல்ல சாதாரணமானதுதானே?

விளம்பரம் ரிலீஸ் ஆனதும் சிலர், நான் பேசுறதையெல்லாம் விட்டுட்டு, அந்த அர்ச்சனை சீனை மட்டும் எடுத்துப் பின்னணியில நான் சிரிக்கற மாதிரி வர்றதை வைரலாக்கி, கலாய்ச்சு காயப் போட்டுட்டாங்க. விடுங்க, எனக்கும் இது பப்ளிசிட்டிதானே” என்றவரிடம்,

`இப்போதய எடப்பாடி பழனிசாமியின் அரசு குறித்து உங்க கருத்து என்ன?’ என்றோம்.

என்னோட அரசியல் அறிவு விசாலமானதுனு சொல்லமாட்டேன். தேர்தல் வந்தா மறக்காம முதல் ஆளா போய் ஓட்டுப் போடுவேன். தொகுதியில நிற்கிற ஆளைப் பத்தி சரியா தெரியலைனாலும், அவர் நிற்கிற கட்சியோட தலைவரைப் பத்தி தெரிஞ்சதை வெச்சு அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவேன். அவ்ளோதான். இப்போதைக்குத் தமிழ்நாட்டுல ஜெயலலிதா இல்லாதது வெற்றிடமாங்கிற டாக் போயிட்டிருக்குனு சொல்றாங்க. உறுதியான முடிவு எடுக்கிறவங்க என்ற முறையில ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்கும்.

அதேபோல கருணாநிதி நாட்டிலேயே சீனியர் அரசியல் தலைவர். அவரோட வழிகாட்டுதலையும் நாம மிஸ் பண்றோம். இப்போ நடக்கிற ஆட்சியைப் பற்றி கருத்துச் சொல்ற அளவுக்கு நான் வொர்த்தான ஆள் இல்லை. என்னத்தையாவது உளறி மாட்டிக்க விரும்பலை. அதேநேரம், நாம விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தத் தேதியில நம்மோட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அய்யாதான். அந்த உண்மையை நாம ஏத்துக்கிட்டுதானே ஆகணும்” என்கிறார்.

Advertisement