தன்புகைப்படங்களை வைத்து உதவியாளர் செய்த செயல் - பார்வதி உதவியாளர் அதிரடி கைது.

By subhashini · 7/12/2022

நடிகை பார்வதி நாயரின் புகைப்படங்களை வைத்து கொலை மிரட்டல் விடுவதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சுபாஷ் சந்திரபோஸ் கைதாகி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் பார்வதி நாயர். இவர் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், இந்த படத்திற்கு முன்பாகவே தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில் ‘ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

இருந்தாலும், இவர் பிரபலமானது என்னவோ என்னை அறிந்தால் படத்தில் தான். அதன் பின் இவர் உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், வெள்ள ராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த வெப் சீரிஸிலும் பார்வதி நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னட மொழியிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் பாரி கே விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பார்வதி நாயர் திரைப்பயணம்:

இந்த படத்தில் வைபவ், முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம். இதனை அடுத்து பார்வதி அவர்கள் ரூபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள் திருட்டு போன சம்பவம் ஏற்கனவே சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை பார்வதி அவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் இரண்டு வருடமாக வேலை செய்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய இரண்டு கைக்கடிகாரம், லேப்டாப், செல்போன் போன்ற பொருட்களை திருடி சென்றிருக்கிறார்.

சுபாஷ் அளித்த புகார்:

இந்த சம்பவம் அறிந்த நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். அதன் பின் அவரை தேடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதனை அடுத்து சுபாஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர், நான் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்து வந்தேன். என்னை பார்வதி அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். என் மீது அபாண்டமாக திருட்டு பட்டம் சுமத்தி இருக்கிறார் என்று கூறி இருந்தார். இதனை அடுத்து பார்வதி நாயர் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

பார்வதி நாயர் அளித்த பேட்டி:

அதில் அவர், என்னோட அனைத்து போட்டோக்களையும் எனது அனுமதி இல்லாமல் சுபாஷ் எடுத்திருக்கிறார். அவர் ஒரு சைக்கோ. அவருக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள். அவர் தப்பு பண்ணி இருக்காரு. அவர் பெரிய குற்றவாளி. அவருக்கு பின்னாடி யாரோ இருந்து கொண்டு அவரை இயக்குகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய புகைப்படங்களையும், செல்போனில் பேசியது எல்லாம் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் பார்வதி புகார் கொடுத்திருந்தார்.

கைதான சுபாஷ்:

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டது. கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மான பங்கம் செய்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் சுபாஷ் சந்திரபோஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் சந்திரபோசை கைது செய்திருக்கின்றனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full