2 கோடி கேட்டு மிரட்டுறாங்க, நடிகை பார்வதி திடீர் அறிக்கை - என்ன காரணம்?

By subhashini · 3/10/2024

தன்னை குறித்து அவதூறு பரப்புவது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் இரண்டு வருடம் வேலை செய்த நபர் சுபாஷ் சந்திர போஸ். இவர் தயாரிப்பு நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

அந்த நிறுவனத்தினுடைய உரிமையாளர் கேட்டுக் கொண்டதால் இவர் பார்வதி நாயர் வீட்டில் வேலைகளை செய்து வந்தார். பின் கடந்த 2020 ஆம் ஆண்டு பல லட்சம் ரூபாய் மதிப்புடைய இரண்டு கைக்கடிகாரம், லேப்டாப், செல்போன் போன்ற பொருட்களை சுபாஷ் சந்திர போஸ் திருடி சென்றிருந்தார் என்று நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன் பின் போலீஸ் சுபாஷ் சந்திர போஸ் இடம் தீவிர விசாரணை நடத்தி இருந்தது.

பார்வதி நாயர் அளித்த புகார்:

இதனை அடுத்து சுபாஷ், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் மீது புகார் அளித்து இருந்தார். அதில் அவர், நான் பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்தேன். என்னை பார்வதி அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். என் மீது அபாண்டமாக திருட்டு பட்டம் சுமத்தி இருக்கிறார் என்று கூறி இருந்தார். இதனை அடுத்து பார்வதி நாயர் பேட்டியில், என்னோட அனைத்து போட்டோக்களையும் எனது அனுமதி இல்லாமல் சுபாஷ் எடுத்திருந்தார். அவர் ஒரு சைக்கோ. அவருக்கு பின்னால் யாரோ இருந்து கொண்டு அவரை இயக்குகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என்று கூறியிருந்தார்.

போலீஸ் விசாரணை:

இதை அடுத்து சுபாஷ் சந்திர போஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பார்வதி நாயர் மீது புகார் கொடுத்திருந்தார். ஆனால், அவர் கொடுத்த புகார் போலீசார் எடுக்கவில்லை. இது அடுத்து இவர் நீதிமன்றத்திலேயே நேரடியாக புகார் அளித்திருந்தார். அதில் அவர், எனக்கு திருமணம் ஆக இருப்பதாக பார்வதி இடம் சொன்னேன். அவர் எந்த பெண் என்று கேட்டதற்கு என்னுடைய சமூகத்தை சார்ந்த தலித் பெண் என்று சொன்னவுடன் அவர் முகம் சுளித்து, என்னுடைய ஜாதியையும் என்னையும் தரகுறைவாக பேசி இருந்தார். அவர் பேசி இருந்ததை நான் ஆடியோவாக பதிவு செய்து இருந்தேன்.

சுபாஷ் அளித்த பேட்டி:

இதை அறிந்த அவர், சில பேரை அழைத்து வந்து அவர், அடித்து ஆதாரத்தை கேட்டார். நான் வெளியில் போய் சொல்லிடுவேன் என்று பயந்து என் மீது போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து நானும் போலீசில் பார்வதி நாயர் மீது புகார் கொடுத்தேன். ஆனால், அவர்கள் நடிகை என்பதால் கண்டுகொள்ளவில்லை. அவர் பேசிய ஆதார வீடியோ என்னிடம் இருக்கிறது என்று கூறி இருங்கத்தார். இதை தொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் நடிகை பார்வதி நாயர், அவருடைய நண்பர்களான இளங்கோவன், செந்தில், அருள்முருகன், அஜித் பாஸ்கர், ராஜேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

பார்வதி நாயர் அறிக்கை:

இந்த நிலையில் நடிகை பார்வதி நாயர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், திருட்டு வழக்கில் தன் பெயரை நீக்க சொல்லி சுபாஷ் என்னை மிரட்டினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் என்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் அளித்தார். என்னுடைய புகைப்படங்களை அனுமதியில்லாமல் சோசியல் மீடியாவில் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகிறார். என்னைப் பற்றி தவறான தகவலை பேட்டியாக கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வழக்கறிஞர் மூலம் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார். அவர் அவர் மீதான புகாரை திரும்ப பெற, இரண்டு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என்றும் சுபாஷ் மிரட்டுகிறார். சுபாஷ் கொடுத்த தொல்லையால் நான் மனம் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை மற்றும் எதிர்ந்த காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக சுபாஷ் இருக்கிறார். உண்மை ஒருநாள் கண்டிப்பாக வெளிச்சத்துக்கு வரும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full