நான் ஒரு குழந்தைக்கு அம்மா, என் உடம்பு அப்படித்தான் இருக்கும்-விமர்சனத்திற்கு பூர்ணா கொடுத்த பதிலடி

By subhashini · 27/1/2024

உடல் பருமன் குறித்த விமர்சனத்திற்கு பேட்டியில் நடிகை பூர்ணா கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்தியா சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு பூர்ணா நடிப்பில் வெளியாகியிருந்த விசித்திரன் படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இதனிடையே நடிகை பூர்னாவிற்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் Shanid Asif Ali என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

பின் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக பூர்ணா அறிவித்திருந்தார். பின் பூர்ணாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகும் பூர்ணா படங்களில் நடித்துக் கொண்டுதான் வருகிறார். அந்த வகையில் தற்போது பூர்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டெவில். இந்த படத்தை சவரக்கத்தி படத்தை இயக்கிய இயக்குனர் ஆதித்யா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விதார்த், அருண், மிஷ்கின் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை எச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

டெவில் படம்:

இந்த படம் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாகியிருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பூர்ணா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் இத்தனை வருடங்கள் சினிமாவில் இருப்பதற்கு காரணம் மிஸ்கின் சார் தான். அவர் கொடுத்த தன்னம்பிக்கையில் தான் என்னுடைய கேரியர் உருவானது. நீ ஒல்லியாக இருந்தாலும், குண்டாக இருந்தாலும் பரவாயில்லை, நடிப்பதை விட்டு விடாதே. ஹீரோயினி என்றால் இப்படிப்பட்ட கதாபாத்திரம் தான் செய்யணும் என்பதை விட்டு நல்ல கதாபாத்திரங்களை பண்ணு என்று எனக்கு புரிய வைத்தார்.

பூர்ணா பேட்டி:

அவருடைய தம்பியும் இயக்குனருமான ஆதித்யா எனக்கு அண்ணன் மாதிரி. இந்த டீம் எனக்கு ஒரு நல்ல குடும்பம் மாதிரி. இந்த டெவில் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் எனக்கு திருமணம் ஆனது. அதற்கு பிறகு கர்ப்பமானேன். கிளைமாக்ஸ் ஷூட் பண்ணும்போது நான் 7 மாதம் கர்ப்பமாக இருந்தேன். அதனால் இந்த படம் எனக்கு ரொம்ப ரொம்ப பர்சனல். என்னுடைய கால் சீட்டுக்காக மற்ற நடிகர்களும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டார்கள். ஷூட்டிங்கில் என்னை ரொம்ப பத்திரமாகவும் பார்த்துக் கொண்டார்கள். மேலும், குழந்தை பிறந்த பிறகு 'குண்டூர் காரம் படத்தில் ஒரு பாடலுக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. முதலில் தயங்கினேன். காரணம், குண்டாக இருப்பதால் யோசித்தேன். பின் த்ரிவிக்ரம் சார், உங்களுக்கு எந்த டிரஸ் சவுரியமோ அதுவே போட்டுக்கலாம் என்று சொல்லிவிட்டார். அந்தப் படம் வெளியாகும் போது மக்கள் என்ன நினைப்பாங்க? என்று பயந்துட்டே இருந்தேன். ஆனால், பாட்டு செம ஹிட்.

உடல் எடை அதிகரிப்பு குறித்து சொன்னது:

எனக்கு எல்லாமே என்னுடைய அம்மா தான். என் அம்மா மாதிரி என்னை பார்த்துக் கொள்கிற ஒரு வாழ்க்கை துணை கிடைக்குமா? என்று பயந்தேன். ஆனால், நினைத்த மாதிரியே என்னுடைய கணவர் கிடைத்தார். அவருக்கு நன்றி சொல்லணும். டெலிவரி ஆன பிறகு வெயிட் போடும். சோசியல் மீடியாவில் என் போட்டோவுக்கு கீழே நெகட்டிவான கமெண்ட்கள் பண்ணுவார்கள். நான் இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா.
என் உடம்பு அப்படித்தான் இருக்கும். அதெல்லாம் எதுவும் புரியாமல் தைரியமாக அப்படி கமெண்ட் பண்றாங்க. நிறைய ஹீரோயின்கள் கல்யாணமான பிறகு அதனால்தான் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு மறுபடியும் ஸ்லிம் ஆகி நடிக்க வருவார்கள்.

கவனர் குறித்து சொன்னது:

குண்டூர் காரம் பட வாய்ப்பு வந்த போது என் கணவரிடம் நான் என் உடல் எடை அதிகரிப்பு குறித்து வருத்தப்பட்டு பேசினேன். அப்போ அவர், உன்னை நடிக்க கூப்பிட்ட இயக்குனருக்கு இதை பத்தி பிரச்சனை இல்லை என்றால் மற்றவர்களை பற்றி நீ ஏன் யோசிக்கிற? உனக்கு ஆதரவா இருக்கிற பாசிட்டிவான மனிதர்களைப் பற்றி மட்டும் யோசி. அவர்களுக்காக மட்டும் வேலை செய் என்று நம்பிக்கை கொடுத்தார். அவர் சொன்ன மாதிரி நிறைய பாசிட்டிவான கமெண்ட்ஸ்கள் வந்தது. கல்யாணத்துக்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் குறையும் என்று நினைத்தேன். ஆனால், தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இப்ப குடும்பத்தை கவனிக்கணும், குழந்தை கூட நேரம் செலவழிக்கணும். அதே சமயம் இதற்கு முன்னாடி பண்ண சில விஷயங்களை இனிமே பண்ண கூடாது என்று நான் நினைத்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full