கொரோனாவால் தாய் தந்தையரை இழந்த சிறுமிக்கு தாயாக மாறி இன்று அவர் கனவை நினைவாக்கிய ரோஜா.

By Rajkumar · 21/11/2022

தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு வெளி வந்து இருந்த “செம்பருத்தி” என்ற படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு என்று பல நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார்.

சில ஆண்டு காலாகவே ரோஜா நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு.மேலும், ஜெகன்மோகன் அமைச்சரவையில் ரோஜாவுக்கு இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,ரோஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருந்தும் ரோஜா அப்பகுதியில் பம்பரமாக சுற்றி பணியாற்றி வருகிறார்.

கொரோனா சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு எம் எல் வாக பல உதவிகள் செய்து இருந்தார் ரோஜா. அந்த பகுதி மக்களின் கல்வி, மருத்துவ உதவி என பல விஷயங்களை செய்து அசத்தி இருக்கிறார் ரோஜா. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவம் செய்ய வசதி இல்லாமல் தாய், தந்தையரை இழந்த புஷ்பா என்கிற பெண் குழந்தையை நகரி எம் எல் ஏ வும், ஆந்திரப் பிரதேச சுற்றுலா மற்றும் இளைஞர்கள் நலன் மேம்பாட்டு நலத்துறை அமைச்சருமான திருமதி.R.K.ரோஜா செல்வமணி அவர்கள் தத்தெடுத்தார்.

அந்த சிறுமிக்கான கல்வியை, வாழ்நாள் முழுவதுற்குமான படிப்பு செலவை தான் ஏற்பதாக அறிவித்தார். அதன்படி அவருக்குண்டான கல்விச் செலவுகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று படிக்க வைத்தார். அந்த சிறுமி தற்போது நடை பெற்ற நீட் தேர்வில் மிக நல்ல மதிப்பெண்களைப் பெற்று, திருப்பதி பத்மாவதி மகளிர் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்று முதலாமாண்டு MBBS பட்டப் படிப்பில் சேர வாய்ப்பு பெற்றுள்ளார்.

மருத்துவ வசதி இல்லாமல் தன் தாய், தந்தையர் இறந்ததைப் போன்று எந்தக் குழந்தைக்கும் அது போன்று ஒரு நிகழ்வு ஏற்படாமல், வருங்காலத்தில் என்னால் முடிந்த அனைத்து மருத்துவ உதவிகளையும் என்னைப் போன்ற குழந்தைகளுக்கு இலவசமாக செய்வதே என் லட்சியம் என்று மேடையில் அறிவித்தார். அதைப் பாராட்டி திருமதி.R.K.ரோஜா அவர்களும், இயக்குநர் RK. செல்வமணி அவர்களும் அந்தக் குழந்தைக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்து இந்த MBBS படிப்புக்கு உண்டான மொத்த செலவையும் தான் ஏற்பதாக ஏற்கனவே அறிவித்ததை உறுதி செய்து கல்வி கட்டணங்களை கட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full