தனது மகளை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா - அவரே சொன்ன உண்மை

By Rajkumar · 26/5/2024

தமிழ் சினிமா உலகில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சுகன்யா, சமீபத்தில் சமூக வலைதளம் ஒன்றில் அளித்த பேட்டி இப்போது வைரலாகியுள்ளது. சென்னையை சேர்ந்த நடிகை சுகன்யாவின் இயற்பெயர் ஆர்த்தி தேவி. தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு 'புது நெல்லு புது நாத்து' என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவருக்கு இயக்குனர் பாரதிராஜா தான் 'சுகன்யா' என்று பெயர் மாற்றம் செய்தார்.

இதனை தொடர்ந்து இவர் சின்ன கவுண்டர், கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு, இந்தியன், போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.அதோடு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து வந்த சுகன்யாவிற்கு, பரதநாட்டிய கலைமீது மிகுந்த ஆர்வமும் உண்டு.

சமீபத்தில் சுகன்யா அளித்த பேட்டி :

நடிகை சுகன்யா சமீபத்தில் அளித்த பேட்டியில், "நான் சினிமாவுக்கு வருவேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நான் படிப்பு முடிந்தவுடன் டான்ஸ் தான் என் வாழ்க்கை என்று நினைத்தபோது, நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்தன. பின்பு என் பெற்றோர்களிடம் கலந்து பேசிய பிறகு தான் சினிமாவுக்கு வந்தேன்" என்றார். தொடர்ந்து தனது பெற்றோர்கள் தான் ஷூட்டிங் போகும்போதெல்லாம் மாறி மாறி தன்னுடன் வருவார்கள் என்றும் தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=BaD6CoQCISs

வதந்திகள் பற்றி பேசிய சுகன்யா:

தொடர்ந்து தனது அக்காவை பற்றி பேசிய சுகன்யா, தனக்கு அக்கா தான் பெரிய இன்ஸ்பிரேஷன் என்றும் தனது அக்கா பாட் பெயிண்டிங், பெரிய கோலம் போடுதல் போல பல திறமை வாய்ந்தவர் என்றார். மேலும், தனது அக்காவின் மகள் சந்தியாவை, தனது மகள் என வதந்திகள் பரப்புவதெல்லாம் வேடிக்கையாக உள்ளது எனவும், தனக்குத் திருமணமாகி சில மாதங்கள் மட்டுமே கணவருடன் சேர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

முதல் படம் பற்றி சுகன்யா கூறியது:

மேலும் தனது முதல் பட அனுபவத்தை பற்றி சுகன்யா கூறுகையில், தனது முதல் படம் 'புது நெல்லு புது நாத்து' நடிக்கும் போது, தனக்கு டான்ஸ் நன்றாக வரும் ஆனால் நடிப்பு வருமா என்று பயந்த போது இயக்குனர் பாரதிராஜா தான் தனக்கு எல்லாம் கற்றுக் கொடுத்தார் என்றார். மேலும், ஃபேமஸ் கேமராமேன் பாபு அவர்கள் தன்னை பார்க்கும்போதெல்லாம், தனது செய்கைகள் எல்லாம் முன்னாள் நடிகை ஜெயலலிதா அம்மாவை பார்ப்பது போல் உள்ளது என்பார் என்று பூரிப்போடு கூறினார்.

சுகன்யாவுக்கு பிடித்த நடிகைகள்:

தொடர்ந்து தனக்கு பிடித்த நடிகைகள் பற்றி கூறும்போது, நடிகைகள் வைஜெயந்தி மாலா, பத்மினி, சாவித்திரி, சௌகார் ஜானகி மற்றும் கே.ஆர்.விஜயா என்றும் 80 களில் நடிகை ஸ்ரீதேவி மற்றும் ஹிந்தி நடிகை சுரேகாவை ரொம்ப பிடிக்கும் என்றார். பின்னர் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் அவர்கள் தனக்கு சின்ன கவுண்டர் படத்தில் வாய்ப்பு கொடுத்ததால்தான் , சினிமாவில் பெரிய நடிகர்களான விஜயகாந்த், மனோரமா, கவுண்டமணி மற்றும் செந்தில் போன்றவர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று நெகிழ்வோடு கூறினார் சுகன்யா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full