மாமனார் பிறந்த நாளுக்கு மருமகள் போட்ட பதிவு, விவாகரத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
தனது மாமனார் அமிதாப் பச்சனின் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா ராய் போட்டிருக்கும் பதிவு தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிவு குறித்த செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். மேலும், 22 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக நிலைத்திருக்கிறார். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமணம்:
இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஆராத்யா என்று அழகான பெண் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் படங்களில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே ஐஸ்வர்யா ராய் -அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் உலாவி வருகிறது.
ஐஸ்வர்யா ராய் -அபிஷேக் பச்சன் விவாகரத்து:
வதந்திகளுக்கு ஏற்ற மாதிரி, சமீபத்தில் நடந்து முடிந்த அம்பானி வீட்டு திருமணத்திற்கு, ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் சேர்ந்து தனியாக சென்றிருந்தார். இன்னொரு பக்கம் அபிஷேக் பச்சன் தன்னுடைய அப்பா, அம்மா மற்றும் சகோதரியுடன் தனியாக சென்றிருந்தார். இருவரும் தனித்தனியாக தான் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இதனால் இவர்களின் விவாகரத்து சர்ச்சை கொளுந்து விட்டு எரிந்தது. கூடிய விரைவிலேயே இவர்கள் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்றெல்லாம் கூறி வந்தார்கள்.
அமிதாப் பச்சன் பிறந்தநாள்:
இருப்பினும் ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் போட்டோ சூட்டின் போது தனது திருமண மோதிரத்தை காட்டி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் மாமனார் அமிதாப் பச்சன் தனது 82 ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடியிருந்தார். அதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து இருந்தார்கள். ஆனால், ஐஸ்வர்யா ராய் அவருக்காக எந்த பதிவும் போடாமல் இருந்தார். ஆனால், நேற்று அவரின் பிறந்தநாள் முடியும் நேரத்தில், சரியாக இரவு 12:00 மணி அளவில் ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராயின் பதிவு:
அதில், அமிதாப் பச்சன் தனது பேத்தி ஆராத்யா உடன் இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். அதில், அவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா, கடவுள் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பார் என்று பதிவு செய்து இருக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யாராயின் விவாகரத்து சர்ச்சைக்கு இது முற்றுப்புள்ளி வைக்கிறது என்று ஒரு சிலர் கூறினாலும், அந்தப் பதிவை ஐஸ்வர்யா ராய் அவ்வளவு தாமதமாக போட்டது மீண்டும் சர்ச்சையை இணையத்தில் கிளப்பி இருக்கிறது.