தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். ரசிகர்கள் அன்போடு ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித், 1993-ஆம் ஆண்டு வெளி வந்த ‘அமராவதி’ என்ற படத்தில் தான் முதன் முறையாக கதையின் நாயகனாக நடித்தார். அந்த படத்தினை இயக்குநர் செல்வா இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘பவித்ரா, ஆசை, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, உல்லாசம், காதல் மன்னன், வாலி, அமர்க்களம், சிட்டிசன்’ போன்ற பல படங்களில் நடித்தார் ‘தல’ அஜித்.

‘தல’ அஜித்துக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

Advertisement

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் ‘தல’ அஜித்துடன் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் ‘வலிமை’. இந்த படத்தில் அஜித்துக்கு செம மாஸான போலீஸ் ரோல் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, அஜித் சில படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு ரொம்பவும் ஒரு ஸ்பெஷலான படமாக இருக்குமாம்.

‘தல’ அஜித்தின் திரை உலக வாழ்வில் ‘வலிமை’ திரைப்படம் அவருக்கு 60-வது படமாம். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ அஜித்தின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வலிமை’ படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்து கொண்டிருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இது அதிக பொருட்செலவில் தயாராகி கொண்டிருக்கிறது.

Advertisement

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை (மே 1-ஆம் தேதி) அஜித்தின் பிறந்த நாள். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அஜித் தனது பிறந்த நாளை முன்னிட்டு 2011 ஏப்ரல் 29-ஆம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

Advertisement

அந்த அறிக்கையில் “வருகிற நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது தலைமையின் கீழ் கட்டப்பட்டு வந்த அஜித் குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன். மாறி வரும் காலகட்டத்தில் பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டதில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கௌரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கௌரவமும், எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும் எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்” என்று அஜித் தெரிவித்திருந்தார்.

Advertisement