இப்போ ஏன் சினிமா வாய்ப்புகள் வரல, ஆனாலும் - பல படங்களில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா ?

By subhashini · 4/1/2022

சினிமாவைப் போலவே சீரியல்களிலும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து செல்கிறது. அதிலும் வெள்ளித்திரை படங்களைவிட சின்னத்திரை சீரியல்கள் தான் மக்கள் மத்தியில் அதிக இடம் பிடித்து வருகிறது. அதுவும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னதிரை நோக்கி சென்று விட்டார்கள். மேலும், வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் உண்டு. அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அகிலா. இவர் 17 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அகிலா மீடியாவிற்குள் நுழைந்தது:

இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சீரியலில் நடிக்க அறிமுகமானார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற சீரியல் மூலம் தான் இல்லத்தரசிகளின் மத்தியில் அறிமுகமானார். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் ரோஜா கூட்டம், சிவசக்தி, கோலங்கள், திருமதிசெல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அகிலா நடித்த சீரியல், படங்கள்:

அதுமட்டுமில்லாமல் இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்திலும் மிரட்டி இருக்கிறார். மேலும், இவர் சீரியலில் மட்டும் இல்லாமல் சரவணன், மனதோடு மழைக்காலம், கண்ணும் கண்ணும், பொல்லாதவன், அரசாங்கம், திருவண்ணாமலை போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பின் இவர் சீசன்ஸ் ஈவன்ட்ஸ் என்ற நிறுவனமும் நடத்தி வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அகிலா நடித்து கொண்டு இருக்கும் சீரியல்:

2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அபியும் நானும். இந்த தொடரில் கிரிஜா சுந்தர் என்ற கதாபாத்திரத்தில் அகிலா நடிக்கிறார். மகளை கண்டுபிடிக்கும் ஒரு அம்மாவின் தேடுதலுக்கான கதை. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகை அகிலா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் சினிமா மற்றும் சீரியல் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

சீரியல், சினிமா அனுபவம்:

என்னுடைய வாழ்க்கையில் சினிமா, சீரியல், ஆங்கரிங் என்ற பயணம் எல்லாம் எங்கே? எப்படி? ஆரம்பித்தது என்று எனக்கே தெரியவில்லை. ஆனால், என்னுடைய வாழ்க்கையில் எல்லாமே சரியாக அமைந்துவிட்டது. பெரிய இயக்குனர்கள், பெரிய நடிகர்கள் படங்களில் எல்லாம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும், படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் தான் சீரியலிலும் வாய்ப்பு கிடைத்தது. பின் நான் சீரியலிலும் பண்ண ஆரம்பித்தேன். சீரியல் பண்ண தொடங்கிய உடன் திடீரென்று சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை? இருந்தாலும் நான் இப்பவும் மீடியாவில் பிஸியாக தான் இருக்கிறேன். அதனால் சினிமா வாய்ப்புகள் வரவில்லையே? என்று நான் யோசித்தது கிடையாது.

எப்பவுமே எனக்கு என்னையே தான் கம்பர் பண்ணுவேன். நான் ஆரம்பத்தில் மீடியாவுக்கு வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் பள்ளியில் நன்றாக படிக்கும் பெண். அதனால் நான் சினிமாவுக்குள் நுழைகின்ற ஆசையெல்லாம் கிடையாது. அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் எனக்கு கேமரா முன்னாடி நிற்க ரொம்ப பயம் கூச்சப்பட்டேன். பின் வளரவளர அதெல்லாம் சரியாக மாறிவிட்டது. பல நடிகர்களுடன், பல படங்களில் நடித்து இருக்கிறேன் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full