மகனின் ஆசையை நிறைவேற்றிய தாய்க்கு நடந்த சோகம் - கண்ணீர் மல்க தந்தை சொன்ன விஷயம்

By subhashini · 6/12/2024

புஷ்பா 2 படத்தால் அநியாயமாக உயிரிழந்த பெண்ணின் கணவன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அல்லு அர்ஜுன். கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த புஸ்பா படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது. இயக்குனர் சுகுமார் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார் . இந்த படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார்கள்.

ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. தற்போது இதே படக்குழுவுடன் புஷ்பா 2: தி ரூல் படம் வெளியாகி இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியாகி இருக்கும் புஷ்பா 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் புஷ்பா 2 படத்தை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அல்லு அர்ஜுன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

புஷ்பா 2 படம்:

அதாவது, புஷ்பா 2 படம் வெளியாகுவதற்கு முன்பு பிரீமியர் ஷோ ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் போடப்பட்டிருந்தது. அந்த தியேட்டருக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜுன் திடீரென்று சென்றிருந்தார்கள். இதனால் உற்சாகத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு போலீஸால் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்த கூட்ட நெரிசலில் 39 வயது உடைய ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அது மட்டும் இல்லாமல் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட அவருடைய மகனுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறை அதிகாரி பேட்டி:

இவர்கள் மட்டும் இல்லாமல் இன்னும் சில பேர் கூட்ட நெரிசலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை அடுத்து இது தொடர்பாக அளித்த பேட்டியில் காவல்துறை அதிகாரி, நடிகர் அல்லு அர்ஜுனும் இசையமைப்பாளரும் தியேட்டருக்கு வருவார்கள் என்று எங்களுக்கு யாருக்குமே தெரியாது. எந்த தகவலும் சொல்லவில்லை. அதனால் தான் அந்த கூட்டத்தை சமாளிக்க ரொம்பவே சிரமமாக இருந்தது. இதில் ஒருவர் இறந்திருக்கிறார். சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழப்பமான சூழலுக்கு காரணமான நடிகர் அல்லு அர்ஜுன், அவருடைய பாதுகாப்பு குழுவினர் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பாஸ்கர் பேட்டி:

கண்டிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
இப்படி இருக்கும் நிலையில் உயிரிழந்த ரேவதியின் கணவன் பாஸ்கர் அளித்த பேட்டியில், என்னுடைய மகன் அல்லு அர்ஜுனுடைய தீவிர ரசிகர். அதனால் தான் அவனுடைய ஆசைப்படி என்னுடைய மனைவி ரேவதி, மகன், மகள்களுடன் புஷ்பா 2 படம் பார்க்க சென்றோம். அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்தவுடன் அவரை காண ரசிகர்களை கூட்டம் அலைபோல மோதியது.

மகன் மனைவி குறித்து சொன்னது:

என்னுடைய மனைவி, மகன் இருவருமே கூட்ட நெரிசலில் சிக்கி இருக்கிறார்கள். மயக்கமான நிலையில் என்னுடைய மகன் கிடைத்தான். அவனை உடனடியாக காவல்துறையினர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றினார்கள். இருந்தாலுமே அவனுக்கு அதிக படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த கூட்ட நெரிசலில் என்னுடைய மனைவியை இழந்துவிட்டேன். என்னால் அவருடைய இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full