13 வருஷத்துல 34 படத்துக்கு இசையமைத்து இருக்கேன், ஆனால் - இசையமைப்பாளர் அனிருத் ஓபன் டாக்

By subhashini · 12/8/2025

செய்தியாளர் சந்திப்பில் அனிருத் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள்.

இதை அடுத்து தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், ஆமீர் கான் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

கூலி படம்:

மேலும், இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அமீர்கான், நாகர்ஜுனா, சௌபின் சாகிர் உட்பட கூலி படத்தின் பிரபலங்கள் பலர் கலந்து இருந்தார்கள். தற்போது இந்த படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் கூலி படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று இருந்தது. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அனிருத், 13 வருடங்களில் நான் 34 படங்கள் பண்ணியிருக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=b6LF0zsw8c0

அனிருத் பேட்டி:

இதில் கூலி எனக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுத்திருக்கிறது. நாகார்ஜுனா சார் ஸ்டுடியோவில் நானும் லோகேஷ் கனகராஜூம் எங்களுடைய ட்ரெண்ட்மார்க் போட்டோ எடுத்தோம். அது எனக்கு ரொம்ப எமோஷனலாக இருந்தது. ஒரு ரசிகனாக கூலி படத்தினை பார்ப்பதற்கு ரொம்ப எதிர்பார்ப்பில் இருக்கிறேன். ஒரு இசை அமைப்பாளராக இருந்தால் எல்லா லெஜெண்டுகளுடனும் பணியாற்ற வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கும். அந்த வகையில் இந்த படத்தில் நான் நாகர்ஜுனா சாருடன் பணியாற்றி இருக்கிறேன். இந்த படத்தில் அவரை திரையில் பார்க்கும்போது நாங்கள் ஆச்சரியப்பட்டோம். நீங்களும் அவரை பார்க்கும்போது ரசிப்பீர்கள்.

கூலி பற்றி சொன்னது:

அவருடன் பணியாற்ற வாய்ப்பு அளித்த லோகேஷ் தான் நன்றி சொல்லணும். அதேபோல் ரஜினி சார் சினிமாவில் 50வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 14ஆம் தேதி அவருடைய முதல் படம் வெளியானது. அதே 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 14ஆம் தேதி அவருடைய கூலி படம் வெளியாகிறது. அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்தால் சந்தோசமாக இருக்கிறது.
மேலும், இந்த படத்தில் டீசரின் போது 'அலேலா பொலேமா' என்ற வசனம் வரும். அதற்கு பலருமே என்ன அர்த்தம் என்று கேட்கிறார்கள்.

அர்த்தம் இது தான்:

நான் டீசருக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது கொஞ்சம் கிரேசியாக ஏதேதோ செய்து கொண்டிருந்தேன். ஸ்டுடியோவில் எதாவது உளறிக்கொண்டு பாடி இருப்பேன். அப்படித்தான் 'அலேலா பொலேமா' என்று பாடி இயக்குனர் லோகேஷ் எனக்கு அனுப்பி இருந்தேன். அதைக் கேட்டுவிட்டு அவர் என்ன அர்த்தம்? என்று கேட்பார் என நினைத்தேன். ஆனால், அவரோ டீசரிலேயே எனக்கு பிடித்தது இதுதான் என்று கூறினார். பின் நான் இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று தேடினேன். கிரேக்க மொழியில் 'நாங்கள் சண்டைக்கு தயார்' என்று அர்த்தம் இருந்தது. ஆனால், இதை பாடும்போது எனக்கு அர்த்தம் எதுவுமே தெரியாது. சும்மாதான் பாடினேன் என்று கூறினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full