விதார்த்தின் அஞ்சாமை தகுதி தேர்வு பாதிப்பின் தாக்கத்தை உண்டாக்கியதாக? இல்லையா? - விமர்சனம் இதோ

By Rajkumar · 8/6/2024

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களின் ஒருவராக விதார்த் திகழ்ந்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அஞ்சாமை'. இப்படத்தில் வாணி போஜன், கிரிதிக் மோகன், ரகுமான், ரேகா, பாலச்சந்திரன் ஐஏஎஸ், ராமர் உள்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.பி சுப்புராமன் இயக்கியுள்ளார். தகுதி தேர்வின் பாதிப்புகளை பேசும் இப்படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தை சேர்ந்த விவசாயி விதார்த் (சர்க்கார்). இவர் மனைவியாக வாணி போஜன் (சரசு), மகனாக கிரிதிக் மோகனம் (அருந்தவம்) நடித்துள்ளார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் அருந்தவம் பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுகிறார். மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் அருந்தவத்துக்கு மத்திய அரசு அமல்படுத்தப்பட்ட 'மருத்துவ கல்விக்கான தகுதி தேர்வு' பெரும் தடையாக உருவெடுக்கிறது. குடும்பத்தில் இழப்பும் ஏற்படுகிறது. இந்த தடைகளை எதிர்த்து அருந்தவும், வழக்கறிஞராக நடிக்கும் மாணிக்கமும் ( ரகுமான்) எப்படி போராடுகிறார்கள் என்பது தான் 'அஞ்சாமை'.

குடும்ப நிலை, மகனுக்காக மேடை நாடகத்தை துறக்கும் தந்தை என்ன தொடக்கத்தில் சிறிது சுவாரசியத்தோடு தொடர்கிறது திரைக்கதை. அரசு பள்ளிகளின் சிறப்பு, தனியார் பள்ளிகளின் பேராசை, தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கல்கள், பயிற்சி மையங்களின் கொள்ளை, தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதில் உள்ள நிர்வாக ரீதியான அலட்சியங்கள், அதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் என பல செய்திகளை சொல்வதோடு, சம்பந்தப்பட்ட அரசையும் கேள்வி கேட்கிறது படம். இவை அனைத்தையும் சொல்வதில் அதிக நாடகத்தன்மை கொண்டதால் படம் முழுவதும் சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது.

மேலும் படத்தில் எமோஷனல் காட்சிகள் இடைவேளை இல்லாமல் தொடர்ந்து வருகின்றது. படத்தில் காட்டும் காட்சிகளை தகவல்களாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என்பது படம் ஆக்குதலில் இருக்கும் சிக்கலை வெளிக்காட்டுகிறது. தகுதி தேர்வு மையங்களில் நடக்கும் ஆக்கிரமிப்புகளை மயப்படுத்தி இருக்கும் இடைவேளை காட்சி இரண்டாம் பாதிக்கான கதை நகர்வுக்கு வலுசேர்த்திருக்கிறது.

இரண்டாம் பாகத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கு பின்னால் உள்ள அரசியல், அரசு அதிகாரிகளின் அலட்சியம், அதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் பற்றியும், அதற்காக கேட்கப்படும் கேள்விகளும் சொல்கிறது. தொடர்ந்து படத்தில் வரும் நீதிமன்ற காட்சிகள் அதிக நாடகத்தன்னைக் கொண்டுள்ளது. அதுவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு வழக்கறிஞர்கள் வாதாடும் போது, அங்கே இருப்பவர்கள் கைதட்டி சிரித்து பார்ப்பது ஏதோ கலை நிகழ்ச்சி போல் இருக்கிறது.

மொத்தத்தில் திரையாகவும், திரைமொழியும் அப்டேட் ஆகாத பாணியில் இருக்கிறது. இதனால் கார்த்திக்கின் ஒளிப்பதிவு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ராம் சுதர்சனின் படத்தொகுப்பு எமோஷனலான காட்சிகளையும் நீட்டி முழக்கி சுவாரஸ்யம் இல்லாமல் காட்டியுள்ளது. ராகவ் பிரசாத்தின் இசை சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. கலாசரனின் பின்னணி இசை சில இடங்களில் கைகொடுத்திருக்கிறது. ஜி.சி ஆனந்தின் கலை இயக்கம் தேவையான பங்களிப்பை வழங்கி உள்ளது.

நிறை:

விதார்தின் எதார்த்தமான நடிப்பு.

பின்னணி இசை ஓகே.

சில வசனங்கள் சிறப்பாக இருக்கிறது.

குறை :

சில காட்சிகள் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.

இசை சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை.

ஒளிப்பதிவு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மொத்தத்தில் அஞ்சாமை சமூகப் பொறுப்பு.

Tamil Behind Talkies AMP · Quick view
View full