மீண்டும் சிவகார்த்திகேயன்- சூரி கூட்டணி சேர ஒரு கதை இருக்கு- இயக்குநர் பொன்ராம் சொன்ன தகவல்

By subhashini · 1/11/2024

சிவகார்திகேயன்- சூரி கூட்டணி குறித்து இயக்குனர் பொன்ராம் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக பொன்ராம் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார். அதற்கு பிறகு திருத்தம் என்ற படத்தை இயக்கி இருந்த.

பின் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனரானார். அதை அடுத்து இவர் ரஜினி முருகன், சீமராஜா,எம்ஜிஆர் மகன் போன்ற பல படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இவர் கிராமத்து கதையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பொன்ராம், என்னுடைய சொந்த ஊர் மதுரை அருகே பூச்சி பட்டி என்ற கிராமம். அந்த ஊரில் தான் நான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன்.

பொன்ராம் பேட்டி:

அதற்குப் பிறகு பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு நான் என்னுடைய அக்கா வீட்டிற்கு போனேன். தேனி பக்கம் அல்லிநகரம் என்ற ஊர். இந்த இடத்திலிருந்து தான் என் படத்திற்கான கதைகளையே உருவாக்கினேன். அதனால்தான் என்னுடைய படங்கள் கிராமங்களின் பாணியில் இருக்கிறது. பள்ளி படிக்கும்போது சினிமா பார்க்கும் ஆர்வம் எனக்கு நிறைய இருந்த.து படிப்பை முடித்துவிட்டு டெக்ஸ்டைல்ஸ் மில் ஒன்றில் வேலை செய்து இருந்தேன். அப்போதுதான் இயக்குனர் பாரதிராஜாவின் படங்களை விரும்பி பார்த்தேன். எனக்கு படத்தின் மீது அதிக காதல் ஏற்பட்டது.

சினிமா வாய்ப்பு:

பள்ளி படிக்கும்போதே கவிதை, கட்டுரை எல்லாம் எழுதி நிறைய பாராட்டுகளும் கிடைத்து இருக்கிறது.
நாங்கள் மாணவர்கள் எல்லாம் சேர்ந்து நாடகங்கள் நடத்தி இருக்கோம். என்னை சினிமா இயக்குனர் என்று தான் கூப்பிடுவார்கள். அதற்கு பிறகு தான் நண்பர் ஒருவனின் மூலம் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்தேன். உதவி இயக்குனராகத்தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு பல வருட போராட்டத்திற்கு பிறகு தான் இயக்குனர் ஆனேன். இயற்கை தான் எனக்குள்ளான சினிமா கனவை உருவாக்கியது. ஆனால், சென்னை வந்த பிறகு தான் எனக்கு சினிமாவில் இயக்குனர் ஆவதற்க்கு திறமை தகுதி இல்லை என்பதை உயர்த்தியது.

சினிமா அனுபவம்:

சினிமாவில் சாதிக்க கனவு மட்டும் பத்தாது. திறமையும் வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டேன். 10 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தம் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் சரியாக போகவில்லை. அதற்கு பிறகு ஏழு வருடங்கள் ரொம்ப கஷ்டப்பட்டேன். சில பேரு உங்களுடைய சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்றெல்லாம் சொன்னார்கள். இருந்தாலும், முயற்சியை விடாமல் போராடினேன். நண்பர் ஒருவருடைய அறிவுறுத்தலின் படி தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை காமெடியாக எடுத்தேன். அந்த படம் நினைத்ததை விட மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

சிவா-சூரி கூட்டணி:

நான் எடுத்த ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மெசேஜை சொல்லி இருக்கேன். ஆனால், காமெடி படம் இயக்குனர் என்று அடையாளம் மட்டும் தான் எனக்கு கிடைத்தது. கிளைமாக்ஸில் தலையை துண்டாக்கும் காட்சிகளை வைத்தால் அங்கீகாரம் கிடைக்குமா? என்று தெரியவில்லை. பெரிய ஹீரோக்களும் காமெடி படங்களுக்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை. மேலும், சிவகார்த்திகேயன்-சூரி இருவரும் சிறப்பான பாதையில் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறார்கள். மீண்டும் சிவா-சூரி கூட்டணியில் ஒரு படம் எடுப்பதற்கான ஐடியாவும் இருக்கிறது. அது எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. அதற்கான சூழல் வந்தால் கண்டிப்பாக வேலைகள் தொடங்கும் என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full