ஊர்வசியின் 700வது படம் 'அப்பத்தா' எப்படி இருக்கிறது - முழு விமர்சனம் இதோ.

By Rajkumar · 4/8/2023

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஊர்வசி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் தற்போது ஊர்வசி நடித்திருக்கும் படம் அப்பத்தா. இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அமித் பார்கவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இது ஊர்வசியின் 700 ஆவது படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் ஊர்வசி ஊறுகாய் வியாபாரம் செய்கிறார். இவர் தன்னுடைய மகன் பாவாடை சாமி மீது எல்லையற்ற பாசத்தை வைத்திருக்கிறார். அப்போது திடீரென்று ஊர்வசியின் மகனுக்கு வெளியூரில் வேலை கிடைக்கிறது. தன் மகனைப் பிரிந்து சோகத்தில் ஊர்வசி வாடுகிறார். ஆனால் ஊர்வசி மீதும், அவருடைய தொழில் மீதும் ஊர்வசி மகனுக்கு எப்போதுமே வெறுப்பு, கோபம் தான். பின் தன்னுடைய மகனின் பிரிவை தாங்க முடியாமல் ஊர்வசி மகன் இருக்கும் இடத்திற்கு செல்கிறார்.

ஊர்வசியின் மகன் அவர் வளர்க்கும் நாயை பார்த்துக் கொள்வதற்காக ஊர்வசியை அழைத்து வருகிறார். ஆனால், சிறுவயதிலிருந்தே ஊர்வசிக்கு நாய் என்றால் பயம். மேலும், தன் மகனின் விருப்பத்திற்காக ஒரு நாயை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை என்பதால் ஊர்வசி பயப்படுகிறார். இறுதியில் அவர் அந்த நாயை எப்படி சமாளித்தார்? உண்மையான அம்மாவின் பாசம் மகன் புரிந்து கொண்டாரா? ஊர்வசிக்கு மகனின் பாசம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை.

இந்த படத்தில் ஊர்வசி அப்பத்தாவாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். படம் முழுக்க இவரே சுமந்து செல்கிறார். தன்னுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். இயக்குனர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஊர்வசியை தேர்ந்தெடுத்து இருக்கிறார். சில இடங்களில் ஊர்வசியின் நடிப்பு பார்வையாளர்களை கண்கலங்க வைத்திருக்கிறது. இவரை எடுத்து மகனாக பாவாடை சாமி கதாபாத்திரத்தில் அமித் பார்கவ் நடித்து இருக்கிறார்.

இவரும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். முதல் அரை மணி நேரம் கதை நன்றாக சென்று கொண்டிருக்கின்றது. பொறுமையாகவும் செல்கிறது. அதற்குப்பின் நாய்க்கு பயப்படும் ஊர்வசி, அதற்குப் பின்வரும் சாகச காட்சிகள், காமெடிகள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவும் பின்னனி இசையும் பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. இடைவெளிக்கு பின்னர் முழுக்க முழுக்க அழுகை காட்சியாகவே இருப்பது பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எப்படா படம் முடியும் என்று பார்வையாளர்கள் கத்தும் அளவிற்கு எமோஷனல் காட்சிகளை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். மேகிங்கும் அந்த பழைய காலத்துக்கு கொண்டு சென்று இருக்கின்றது. மொத்தத்தில் அம்மா, மகன் பாச கதையை ஒரு வித்தியாசமாக கொடுக்க இயக்குனர் முயற்சித்து இருக்கிறார். ஆனால், கொண்டு சென்ற விதத்தில் கவனம் செலுத்தி இருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.

நிறை:

ஊர்வசியின் நடிப்பு சிறப்பு

எமோஷனல் காட்சிகள்

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்

குறை:

இடைவெளிக்கு பின் முழுக்க முழுக்க அழுகை காட்சிகள்

பல இடங்களில் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது

இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்

கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் நன்றாக கொடுத்திருக்கலாம்

மொத்தத்தில் ஊர்வசியின் அப்பத்தா- வெற்றி பாதையை தவறவிட்டது

behindtalkies AMP · Quick view
View full