அவனும் உயிர் தானேன்னு விஜயகாந்த் செய்தது பெரிய விஷயம் - நெகிழ்ச்சியில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னது

By subhashini · 16/5/2025

படைத்தலைவன் படத்தின் விழாவில் விஜயகாந்த் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் விஜயகாந்தை யாராலும் மறக்க முடியாது. அவரின் மகன்களில் இளையவரான சண்முக பாண்டியன் தன் தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்து உள்ளார். தற்போது சண்முகபாண்டியன் அவர்கள் ‘படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கும்கி படத்தை போல யானை சம்மந்தப்பட்ட படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்தப் படத்தை வால்டர், ரேக்ளா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அன்பு இயக்கி இருக்கிறார்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது.

இந்த விழாவில் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சசிகுமார், ஏ.ஆர். முருகதாஸ், கஸ்தூரிராஜா ஆகியோருடன் பட குழுவினரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், நான் வசனகர்த்தா கலைமணி சாரிடம் தான் வேலை செய்திருந்தேன். அப்போது கருப்பு நிலா படத்தின் போது தான் முதன் முதலாக கேப்டனை நேரில் பார்த்தேன். நான் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு கிளாஸ் கொடுத்தார்கள். நான் அது மோராக இருக்கும் என்று தான் நினைத்து குடித்தேன். ஆனால், குடித்த பிறகு தான் அது ஹார்லிக்ஸ் எனக்கு தெரிந்தது. நம்மை மாதிரி அசிஸ்டன்ட்டுக்கு எல்லாம் ஹாலிக்ஸ் கொடுப்பார்களா? என்ற எண்ணம் எனக்கு வந்தது. பின் வேறு யாரோ குடித்து மிச்சமான ஹார்லிக்ஸ் கொடுத்தார்களா? என்றெல்லாம் பார்த்தேன்.

ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னது:

அதற்கு பிறகு தான் எனக்கு உண்மை தெரிந்தது. அடுப்பில் பெரிய பாத்திரத்தில் ஹார்லிக்ஸ் உடைத்து கொட்டி கொண்டிருந்தார்கள். அதைப்பற்றி நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால், நான் அதை நேரிலேயே பார்த்தேன். கேப்டன் இருக்கும் செட்டில் அனைவருக்குமே ஹார்லிக்ஸ், இளநீரெல்லாம் கொடுப்பார். கருப்பு நிலா படத்தின் உடைய படபிடிப்பு கோவை நடைபெற்றது. அங்கு சிலர் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார்கள். அப்போது மாலை போட்டவர்களுக்கு சாப்பாட்டை கவனித்து அவர்களுக்கு தனியாகவே உணவு செய்ய சொன்னார். ஒரு நடிகர் படத்தில் தனக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்று மட்டும் கவனிப்பார். ஆனால், கேப்டன் மற்றவர்களுடைய வயிறும் நிறைய வேண்டும் என்று பார்ப்பார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயகாந்த்:

கேப்டன் பிரபாகரன் படத்தினுடைய ஹெலிகாப்டர் ஷாட் காட்சியை எடுக்கும் போது நானும் அப்போ படப்பிடிப்பு தளத்தில்தான் இருந்தேன். அன்று பிரேமலதா அண்ணியும், பசங்க ரெண்டு பேருமே வந்திருந்தார்கள். இன்றும் அந்த நினைவுகள் எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால், ஹெலிகாப்டர் காட்சி எடுக்கும் போது அவர்கள் இல்லை. ஸ்டன்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ், அந்த காட்சிக்கு டூப் போடலாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், கேப்டன் டூப் வேண்டாம். நானே பண்ணுகிறேன் என்று சொன்னார். அண்ணியிடம் மட்டும் டூப் போட்டு பண்ணதாக சொல்ல சொன்னார். மாஸ்டர் டூப் போடலாம் என்று சொல்லியுமே கேப்டன் கேட்கவில்லை. அப்போது கேப்டன், டூப் போடுறவனும் ஒரு உயிர் தானே, அவனுக்கு மட்டும் ரெண்டு உயிரா இருக்கு என்று சொன்னார்.

https://www.youtube.com/watch?v=8BEApRaZtTU

விஜயகாந்த் பற்றி சொன்னது:

அந்த வார்த்தையை கேட்டதுமே அவர் மேல எனக்கு ஒரு பெரிய மரியாதை வந்தது. பல நடிகர்கள் டூப், கிராபிக்ஸ் பயன்படுத்திட்டு அந்த காட்சியை நான்தான் பண்ணினேன் என்று சொல்வார்கள். ஆனால், டூப் இல்லாமல் நடித்துவிட்டு அந்த காட்சியில் டூப் தான் நடித்தது என்று வெளியில் வந்து சொன்ன ஒரே பெரிய மனுஷன் விஜயகாந்த் தான். மேலும், ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் எண்ணத்தை உருவாக்கியவர் விஜயகாந்த் தான். அதற்கு ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும். எல்லோருமே விஜயகாந்தை பற்றி நிறைய பேசியிருப்பார்கள். ஆனால், அவருடன் பணியாற்றி அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்த் உடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால், கஸ்தூரி ராஜாவுமே பணியாற்றி இருக்கிறார் என்று சொன்னார்.

ரமணா 2 படம்:

என்னுடைய திருமணத்தின் போது விஜயகாந்த் அங்கு வந்தார். அப்போது பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவரைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தார்கள். அது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. விஜய்காந்தினுடைய விடாமுயற்சியும் கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களை கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் அவர்களுக்கு கிடைத்திருக்கிறார்கள். விஜயகாந்தினுடைய இரண்டு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு இருக்கிறது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள். கண்டிப்பாக ரமணா 2 படம் எடுக்கலாம் என்பர் பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full