இந்தியில் பாடிய பாடகி, அடுத்த வரியை தமிழில் பாடிய ரஹ்மான் - தலைவன் எப்பவும் மாஸ் தான்

By subhashini · 16/7/2024

அம்பானி வீட்டு திருமணத்தில் ஏ.ஆர்.ரகுமான் தமிழில் பாடி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வாரத்தில் இருந்து சோசியல் மீடியா முழுவதும் ஆனந்த் அம்பானி திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உலக அளவில் மிக பிரபலமான பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தான் திருமணம் கொண்டாட்டங்கள் நடைபெற்று இருக்கிறது.

தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள், ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை தான் ஆனந்த் அம்பானி திருமணம் செய்து இருக்கிறார். கடந்த ஆண்டு இவர்களுடைய நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. மேலும், திருமணத்திற்கு முந்தையாக நடைபெற இருந்த விழாக்கள் எல்லாம் கோலாகலமாக நடந்திருந்தது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் தான் திருமண விழா தொடங்கியது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இந்த விழா குறித்த ஏற்பாடுகள் நடந்தது.

அம்பானி வீட்டு திருமணம்:

இதில் இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான உணவுகள், கலை நிகழ்ச்சி என கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். அதேபோல் இந்த திருமணத்தில் இந்தியாவின் மிக பெரிய தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், இந்தியாவின் அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச பிரபலங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். கடந்த வெள்ளிக்கிழமை ராதிகா- ஆனந்த் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

https://youtube.com/shorts/2epfqmp6gJk?si=6pUkpi_3xWyXf1p0

விழாவில் ஏ.ஆர்.ரகுமான்:

கிட்டத்தட்ட 5000 கோடி வரை திருமண செலவு ஆனதாக கூறப்படுகிறது. மேலும், அம்பானி வீட்டு திருமணத்தில் பல நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. அதில் இசை நிகழ்ச்சியும் ஒன்று. உலகம் முழுவதிலும் புகழ்பெற்ற இசையமைப்பாளர், பாடகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு இசையமைத்து பாடிய இருந்தார்கள். அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து இருந்தார்.

மாஸ் காட்டிய ரகுமான்:

பின் இவர் நிகழ்ச்சியில் பாடலும் பாடியும் இருந்தார். அப்போது, பாடகி ஒருவர் நிகழ்ச்சியில் ஹிந்தியில் பாடியிருந்தார். உடனே ஏ.ஆர்.ரகுமான் அடுத்த வரியை தமிழில் பாடியிருந்தார். தற்போது இந்த வீடியோவை தான் இணையத்தில் பகிர்ந்து, 'எப்பவும் தலைவன் மாஸ்' என்று ஹாஸ்டேக் போட்டு வைரலாகி வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் தமிழின் மீது அதிக பற்று கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் எப்போதுமே எந்த மேடையிலும் தமிழை விட்டுக் கொடுத்ததில்லை.

ஏ.ஆர்.ரகுமான் தமிழ்ப்பற்று:

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி இருந்த போதும் தமிழில் தான் பேசியிருந்தார். பல இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளிலும் இவர் தமிழில் தான் பேசியிருந்தார். அதுமட்டுமில்லாமல் இவருடைய குடும்பத்தினர் கூட நிகழ்ச்சியில் இந்தியில் பேசியிருந்தால் திட்டி தமிழில் பேசுங்கள் என்று சொல்லுவார். அந்தளவிற்கு தமிழ் மீது நேசம் கொண்டவர். தற்போது அம்பானி வீட்டின் திருமணத்தில் ரகுமான் தமிழில் பாடியிருப்பதை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full