கொரோனா வைரஸ் என்னும் covid -19 அச்சுறுத்தலால் உலகமே கதி கலங்கி உள்ளது. சீனாவிலிருந்து தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் 874 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் மற்றும் 19 பேர் உயிர் இழந்து உள்ளார்கள். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸை எதிர்த்து அரசாங்கம், காவல்துறை, மருத்துவர்கள் என அனைத்து துறையும் போராடி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் கட்டிட வேலை, கூலி வேலை என ஒவ்வொரு தொழிலாளிகளும் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
தினந்தோறும் கூலி செய்து பிழைக்கும் மக்களெல்லாம் பசியால் வாடி வருகின்றார்கள். ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவுக்கு கூட மக்கள் கஷ்டப்படும் சூழல் தற்போது ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் திருநங்கைகள் ஊரடங்கு உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். சாதாரண மனிதர்களை விட திருநங்கைகள் அன்றாட சாப்பாடுக்கே திண்டாடும் நிலையில் இருக்கின்றனர். யாரும் திருநங்கைகள் குறித்து எண்ணிப்பார்க்கவே இல்லை.
இந்த நிலையில் மலையாள நடிகை மஞ்சுவாரியார் அவர்கள் திருநங்கைகளுக்காக உதவி உள்ளார். தனது ஒப்பனை கலைஞர் ஒருவர் மூலம் திருநங்கைகள் உணவுக்காக படும் சிரமத்தை அறிந்து உள்ளார் மலையாள நடிகை மஞ்சு வாரியார். பின் இவர் திருநங்கைகளின் உணவுச் செலவுக்காக 35 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். ஊரடங்கு உத்தரவு காலத்திற்காக 50 பேரின் உணவுக்காக 35 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து உதவி பெற்ற திருநங்கைகள் கூறியது, திருநங்கைகளும் மனிதர்கள் தான். எங்களது பசியை போக்க முன்வந்த மஞ்சு வாரியரின் மனித நேயத்திற்கு நன்றி என்று கூறியுள்ளார். ஏற்கனவே மஞ்சு வாரியர் அவர்கள் மலையாள திரைப்பட தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். அதே போல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் 10 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சு வாரியர் அவர்கள் மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாவார். மலையாள திரையுலகம் இவரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். கடந்த ஆண்டு தனுஷ்,மஞ்சு வாரியர் நடிப்பில் வெளிவந்த அசுரன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார்.