36 வருடங்களுக்குப் பின் ரீமேக் ஆகும் முந்தானை முடிச்சு - பாக்கியராஜ் இயக்கத்தில் நடிக்கப்போவது யாரு தெரியுமா ?

By Rajkumar · 20/5/2020

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் கே பாக்யராஜ்ஜூம் ஒருவர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். அந்த வகையில் 1983 ஆம் ஆண்டு இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தவக்களை,தீபா, கே.கே.செளந்தர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் வெளியாகி இருந்தது.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதோடு நடிகை ஊர்வசி அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம் இது தான். மேலும், இந்த படம் அப்போதே திரையரங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. பின்னர் இந்த முந்தானை முடிச்சு படத்தினை ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ரீமேக் செய்திருந்தார்கள்.

இந்த நிலையில் 36 வருடங்களுக்குப் பிறகு முந்தானை முடிச்சு படத்தினை ரீமேக் செய்யப்படுவதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை ஏ.வி.எம் சரவணனிடமிருந்து ஜே.எஸ்.பி சதீஷ் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் பாக்யராஜ் இந்த படத்தை இயக்குவதாக முடிவானது.

இந்த ரீமேக்கில் பாக்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தினை தற்போது இருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு ரீமேக் செய்ய பாக்யராஜ் முடிவெடுத்துள்ளார். பாக்கியராஜ் மற்றும் சசிகுமார் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் எல்லாம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full