நான் உன்ன நம்பல, உன்ன நான் ஆளாக்கி இருக்கனும்னு அப்பா தேம்பி தேம்பி அழுதார் - மனோஜ் பாரதிராஜா உருக்கம்.

By subhashini · 27/9/2023

அப்பா பெயர் தான் எனக்கு நெகட்டிவ் என்று மனோஜ் பாரதிராஜா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்பவர் பாரதிராஜா. இவருடைய மகன் தான் மனோஜ். இவரும் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர். 1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு நடிகராக அறிமுகமானார். அதற்குப் பிறகு இவர் கடல்பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சமுத்திரம், அன்னக்கொடி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவரால் பெரிய அளவில் சினிமாவில் சாதிக்க முடியவில்லை.

பின்பு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் நடிப்பிலிருந்து விலகி பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார். பின் சிறிய இடைவெளிக்கு பின் இவர் ஈஸ்வரன், மாநாடு போன்ற இரு படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு நீண்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது இவர் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை சுசீந்திரனின் வெண்ணிலா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பல புது முகங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பாரதிராஜா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மனோஜ் பாரதிராஜா இயக்கிய படம்:

மேலும், இந்த படம் அக்டோபர் ஐந்தாம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனோஜ் பாரதிராஜா தன்னுடைய திரை பயணம் தோல்வி குறித்து கூறியிருப்பது, இந்த இடத்தில் நான் இயக்குனராக உட்கார்ந்து இருக்கிறேன். இதற்கு பலர் காரணமாக இருக்கலாம். ஆனால், அதற்கு மூல காரணம் என்னை சுமந்து வந்து எனக்கு உறுதுணையாக எல்லா கஷ்டத்தையும் தாங்கிக் கொண்ட என்னுடைய மனைவி தான். அவளும் என்னுடைய குழந்தைகளும் இல்லை என்றால் நான் என்றைக்கோ மன அழுத்தத்திற்கு சென்று மெண்டல் ஆகி இருப்பேன்.

மனோஜ் பாரதிராஜா அளித்த பேட்டி:

வெளியே இருந்து பார்க்கும்போது யாருக்கும் நான் பாதிக்கப்பட்டிருந்தது பெரிய அளவில் தெரியாது. அவனுக்கு என்னடா பாரதிராஜா பையன். அவனுக்கு என்ன குறைச்சல் என்றுதான் சொல்வார்கள். என் இடத்திலிருந்து பார்த்தால் தான் எனக்குள் இருக்கும் வலி வேதனை தெரியும். எப்பேர்ப்பட்ட ஜாம்பவானாக இருந்தாலும் அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம் நிச்சயமாக இருக்கும். இப்படிப்பட்ட காலத்தில் என்னுடன் இருந்த அந்த ஜீவனுக்கு நான் நன்றி சொல்லவில்லை என்றால் நான் மனுசனே கிடையாது. 2005 இல் இருந்து 2012 வரை நான் வேலையில்லாமல் தான் இருந்தேன். அந்த நேரத்தில் வருமானமே கிடையாது. பல்லை கடித்துக் கொண்டு வீட்டில் உட்கார்ந்து இருந்தேன்.

கஷ்டமான காலம்:

கிட்டத்தட்ட அது எனக்கு ஒரு கொரோனா காலம் என்று சொல்லலாம். இங்கு எல்லோருக்கும் ரெண்டு வருஷம் தான் கொரோனா லாக்டவுன் இருந்தது. ஆனால், எனக்கு மட்டும் ஏழு வருடம் லாக் டவுன். உண்மையில் நான் வெற்றியாளராக இருந்தால் தொடர்ச்சியாக படங்கள் செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் செய்ய முடியவில்லை. ஏதோ ஒரு நாள் வாய்ப்பு வருவதெல்லாம் வெற்றி கிடைக்காது. இயக்குனர் வாய்ப்பு கேட்டு நான் நிறைய கம்பெனி ஏறி இறங்கி இருக்கிறேன். அவர்கள் உங்களிடம் தான் மனோஜ் கிரியேஷன் இருக்கிறதே உங்கள் அப்பாவிற்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லையா என்றெல்லாம் சொல்வார்கள். அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று எனக்கு புரியாது.

பாரதிராஜா குறித்து சொன்னது:

அவர்களுக்கு என்னுடைய திறமை தெரியவில்லை. நான் தனித்து வர முயற்சி செய்தேன். என்னுடைய அப்பா பெயர் தான் எனக்கு பாசிட்டிவான விஷயமும் நெகட்டிவான விஷயத்தையும் கொடுத்தது. இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் பிரேக்கில் என்னை பார்த்து அப்பா தேம்பி தேம்பி அழுதார். உடனே என்னப்பா என்று கேட்டேன். அதற்கு அவர், நான் உன்னை என்னமோ நினைத்தேன். நானே உன்னை நம்பவில்லை. உன்னை நான் தான் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று ரொம்ப வருத்தப்பட்டு பேசினார் என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full