ஐந்து நாள் தான் அவகாசம், விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பகுஜன் சமாஜ் கட்சி- காரணம் என்ன தெரியுமா?
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' எண்ணும் தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார். அதோடு வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் கூறியிருந்தார்.
அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி அறிமுகம் செய்திருந்தார். விஜய் தன்னுடைய கட்சி கொடியை ஏற்றுவதற்கு முன் உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி, கொடியை ஏற்றி இருந்தார். அந்தக் கொடியில் வாகை மலரும், இரு பக்கம் யானை படமும் இடம்பெற்று இருக்கிறது. பலரும் விஜயின் கட்சிக் கொடியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.
தவெக முதல் மாநாடு:
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த தலைவர் விஜய் திட்டமிட்டு இருந்தார். இந்த மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் காவல்துறையிடம் மனு அளித்திருந்தார். அதனை அடுத்து, காவல்துறை தரப்பில் 21 கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கியிருந்தார்கள். பின் அந்தக் கேள்விகளுக்கான பதில் அடங்கிய மனுவை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் வழங்கியிருந்தார்கள்.
மாநாடு அறிக்கை:
அதற்குப்பின், 33 நிபந்தனைகளுடன் மாநாட்டை நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்கியிருந்தார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் முதல் மாநாடு குறித்து அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதில், நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாலை நாலு மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெறும் என்பதை அறிவித்திருந்தார்.
தவெக தலைவர் வேண்டுகோள்:
இந்நிலையில் இன்று வெளியிட்ட அறிக்கையில், கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் சிறுமியர், நீண்ட கால உடல் நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வர திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லாருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல் தான் எனக்கு இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் விட அவர்களின் நலனே எனக்கு மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூர பயணம் அவர்களுக்கு உடல் ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால், மாநாட்டில் ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக அவர்கள் வீட்டில் இருந்தே கலந்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி அறிக்கை:
இந்த சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதாவது பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் மற்றும் மாநில துணைத் தலைவர் சந்தீப் இப்பொழுது தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்குநோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் எதிர்வரும் 5 நாட்களுக்குள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்கிட வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருக்கிறது. அப்படி அதை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் இன்றும் கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.