பலரும் தயங்கும் முயல் வளர்ப்பு தொழிலில் சாதித்து காட்டிய மதுரைக்காரர் சபரி - இதோ சில டிப்ஸ்களுடன்.

By Sathya · 5/11/2021

யாராலும் முடியாது என்று சொல்லிய முயல் வளர்ப்பு தொழிலில் சாதித்து காட்டிய இளைஞர் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. முயல் வளர்ப்பு தொழிலில் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர் சபரிநாதன். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் தான் சபரிநாதன். மதுரை மாவட்டத்திலுள்ள அழகர் கோவில் செல்லும் வழியில் உள்ள கிராமத்தில் சாஸ்தா முயல் பண்ணையை பராமரித்து வருகிறார். இவர் எம்பிஏ பட்டதாரி. படிப்பு முடித்தவுடன் சபரி இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். பின் தொடர்ந்து இவர் எம்என்சி கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றினார். மேலும், மாதம் இவருக்கு 40 ரூபாய் சம்பளம் வந்தது.

அப்போது இவர் பணிபுரிந்த இடத்தில் ஆடு வளர்ப்பு குறித்த ப்ராஜெக்ட் செய்ய சொல்லியிருந்தார்கள். அந்த ப்ராஜெக்ட் செய்ய இவர் பல மாதங்களாக அலைந்து திரிந்தார். அப்போது ஏழு கோடி ரூபாய் பட்ஜெட்டில் பரண் மேல் ஆடு வளர்ப்பு ப்ராஜெக்டை தயாரித்தார். பின் அந்த ப்ராஜெக்டில் இவர் சேகரித்த தகவலை வைத்துக் கொண்டு தன்னுடைய வேலையை விட்டு இவரே கால்நடை வளர்ப்பில் இறங்கினார். பொதுவாகவே படித்த முடித்தவுடன் பன்னாட்டு நிறுவன வேலை, பாரின் வேலை என்று இளைஞர்கள் சென்றிருந்தாலும் பின்பு அங்கு நடக்கும் சில விஷயங்களால் சொந்த ஊருக்கே வந்து கால்நடை வளர்ப்பிலும், விவசாயத்திலும் கவனம் செலுத்துகிறார்கள்.

அந்த முயற்சியில் தான் சபரிநாதன் இறங்கியுள்ளார். ஆரம்பத்தில் சபரிநாதன் மூன்று லட்ச ரூபாய் முதலீட்டில் ஆடுகளை பராமரித்து வந்தார். பின் போதிய பராமரிப்பு இல்லாததால் ஆடுகள் எல்லாம் வியாதி வந்து இறந்தது. பின் இவருடைய முயற்சி தோல்வியடைந்ததால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இதில் இவருக்கு 50 ஆயிரம் மட்டுமே மிஞ்சியது. அந்த சமயத்தில் தான் இவருடைய நண்பர் ஒருவர் முயல் வளர்ப்பு பற்றி யோசனை கூறினார். முயல் வளர்ப்பு என்றாலே பலரும் பின் வாங்குவார்கள். பொதுவாகவே முயல் வளர்ப்பு சரியாக வராது. அதனால் வாழ்க்கையில் மட்டுமில்லாமல் தொழில் நஷ்டம் வரும் என்று பல காரணங்களை சொல்வார்கள்.

ஆனால், இதையெல்லாம் சபரிநாதன் கண்டு கொள்ளாமல் தேடி அலைந்து முயல் வளர்ப்பு பணியை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் வீட்டு மொட்டை மாடியில் தான் இந்த முயல் பண்ணையை தொடங்கினார். மேலும், கையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்துடன் கொஞ்சம் பணம் கடனாக வாங்கி 5 யூனிட் முயல்களை கொண்டு முயல் பண்ணையைத் தொடங்கினார் சபரிநாதன். ஒரு யூனிட்டுக்கு ஏழு பெண் முயல், 3 முயல் என வீட்டிலேயே 170 குட்டிகளை வளர்த்தார். ஆனால், முயல் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தாததால் 150 குட்டிகள் இறந்தது.

பின் பல நஷ்டங்கள் அடைந்த சபரிநாதன் வெறித்தனமாக தன்னுடைய தொழிலில் முன்னேற பாடுபட்டார். மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு மாதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வருமானம் ஈட்டும் அளவிற்கு முயல் வளர்ப்பு தொழிலில் முன்னேறி உள்ளார். தமிழ்நாட்டில் 200 பேர் முயல் பண்ணை வைத்து வளர்ப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது சபரிநாதன் தான். இவர் முயல் பண்ணை வளர்ப்பில் மட்டுமில்லாமல் ஆடு, மாடு என்று கால்நடை வளர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்தினார்.

பெரும்பாலும் ஆடு, கோழி வளர்ப்பில் கொடிகட்டிப் பறந்தாலும் முயல் வளர்ப்பு என்றாலே பலரும் பின் வாங்குவார்கள். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் முயல் தொழிலில் முந்திக்கொண்டு லாபம் ஈட்டி முன்னேறி நிரூபித்து பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கி இருக்கிறார் சபரிநாதன். தற்போது இவர் பண்ணையில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, முயல், வாத்து, வான்கோழி வளர்ப்பு என்று சபரிநாதன் பண்ணையே செழுமையாய் இருக்கிறது.

முயல் வளர்ப்பு முறை குறிப்புகள்:

பொதுவாகவே முயல் கொட்டகை அமைக்க தரையிலிருந்து 2 அடி உயரத்தில் கூண்டை அமைக்க வேண்டும். 10 அடி நீளம், அகலம் கொண்ட பெரிய குண்டை 2 அடி நீளம் 2 அடி அகலம் 1.5 அடி உயரம் என்ற கணக்கில் ஒரு முயலுக்கு தேவையான சிறு சிறு துண்டுகளாக பிரித்து கொள்ள வேண்டும். தரை தளத்தில் இருந்து இரண்டு அடி உயரத்தில் கூண்டுகள் இருப்பதால் கழிவுகளை சுத்தம் செய்வது கொஞ்சம் எளிமையாக இருக்கும். முயலுக்கு காலையிலும் மாலையிலும் தீவனம் வைக்க வேண்டும். அதற்கு பிறகு தண்ணீர் மட்டும் பாத்திரத்தில் சுத்தமாக வைத்து விடவேண்டும். மாலையில் பசுந்தீவனம் முட்டைக்கோஸ் இலைகள், காலிபிளவர் இலைகள், பசும் பொருட்கள் இதையெல்லாம் முயலுக்கு உண்ண கொடுக்கலாம்.

ஒரு முயலுக்கு தினமும் 100 கிராம் அடர்தீவனம் அளிக்க வேண்டும். மேலும், அந்த அடர் தீவனத்தை நன்கு பிசைந்து நல்லா தயிர் சாதம் போல் வைக்க வேண்டும். அப்போது தான் முயல் எளிமையாக சாப்பிடும்.


முயல்களின் சினைக்காலம் 30 நாட்கள். ஒருமுறை முயல் ஆறிலிருந்து எட்டு குட்டிகளை ஈனும். குட்டி ஈன்ற உடனே அடுத்த சினைக்கு தயாராகிவிடும். பெரும்பாலும் முயல் 35 நாட்களுக்கு ஒரு முறை குட்டி ஈனும்.


அதனால் தான் முயல் அமாவாசைக்கு குட்டி போடும் என்று சொல்வார்கள். முயல் வளர்ப்பில் மிக முக்கியமானது குட்டிகள் பராமரிப்பு தான். பொதுவாகவே முயல்களை பணியாளர்களுக்காக, செல்லப்பிராணிகளுக்கு, கறிக்கு என்று பல வகையில் வளர்த்து விற்பனை செய்கிறார்கள்.

மேலும், முயல் வளர்ப்பு தொழில் செய்பவர்கள் முதல் ஆறு மாதங்களுக்கு எந்த ஒரு வருமானத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் பண்ணையில் முயல் தனக்கு ஏற்ற சூழ்நிலையை அமைத்துக் கொள்ள 15 நாட்கள் ஆகும். அதற்குப் பிறகு அது குட்டிகளை ஈன்று அந்த குட்டிகள் வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகி விடும். அதனால் 6 மாதம் வரை முயல் வளர்ப்பில் எந்த ஒரு லாபமும் எதிர்பார்க்க முடியாது. முயல் வளர்ப்பு தொழிலில் முயல் தான் இருக்கும் இடத்தின் சூழலுக்கு ஏற்ப அமைந்து விட்டது என்றால் முயல் பெருகப் பெருக வருமானமும் பெருகும். முயல் வளர்ப்பில் பல கஷ்டங்கள் இருந்தாலும் லாபம் அதற்கேற்ற வகையில் பன்மடங்கு கிடைக்கும். இவருடைய முயல் வளர்ப்பு முறை நிறைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full