சென்னையில் சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனாசிங்கின் செல்போனைப் பறித்த திருடர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். கோ, ரேணிகுண்டா, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். இவர், முகப்பேரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இவர், தினமும் சைக்கிள், நடைப்பயிற்சி மேற்கொள்வார்.

Advertisement

இன்று அதிகாலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள உறவினர், வீட்டுக்கு சைக்கிளில் சென்றார். அப்போது, அண்ணாநகர் சிந்தாமணி அருகே சைக்கிளில் நடிகை சஞ்சனா சிங்கிடமிருந்து செல்போனை பைக்கில் வந்த இரண்டு பேர் பறித்துவிட்டு பறந்தனர். இதனால் திருடன், திருடன் என்று சஞ்சனா கதறினார்.

செல்போன் திருடனைப் பிடிக்க சிலர் முயற்சி செய்தனர். ஆனால் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சஞ்சனா சிங் தரப்பில் அண்ணாநகர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “நடிகை சஞ்சனா சிங், சைக்கிளில் சிந்தாமணி சிக்னல் அருகே வந்துள்ளார். கீழ்ப்பாக்கத்துக்குச் செல்ல செல்போனில் கூகுள் மேப் மூலம் வழி பார்த்துள்ளார். அப்போதுதான், அவரைப் பின்தொடர்ந்து பைக்கில் ஹெல்மேட் அணிந்துவந்த இருவர் செல்போனைப் பறித்துள்ளனர். செல்போனின் மதிப்பு 80,000 ரூபாய் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையர்களைத் தேடி வருகிறோம்” என்றனர்.

Advertisement