மீண்டும் மீண்டும் ஏன் இப்படி? எனக்கு இது தான் ப்ரச்சனை - குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி எமோஷனல்
தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு நடிகை பவித்ரா லட்சுமி முற்றுப்புள்ளி வைத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பவித்ரா லட்சுமி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் ஆரம்பத்தில் குறும்படம் மூலம் மீடியா துறைக்கு அறிமுகமானார்.
பின் இவர் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். பின் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து இவர் நினைக்கத் தெரிந்த மனமே என்ற சீரியலில் கூட நடித்திருக்கிறார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கி இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். அதன் பின் இவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியிருந்த ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பவித்ரா திரைப்பயணம்:
அதற்குப்பின் இவர் சதீஷ் ஹீரோவாக நடித்திருந்த நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து இவர் மலையாளம், தமிழ் என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் கடந்த ஆண்டு வெளிவந்த ஜிகிரி தோஸ்த் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் டைம் என்ன பாஸ் என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தான் இவரின் அம்மா உடல் நலக்குறைவால் இறந்தார்.
பவித்ரா குறித்த தகவல்:
இது பவித்ராவுக்கு பெரும் இடியாக இருந்தது. அதில் இருந்து மீண்டு இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து சில மாதங்களுக்கு முன் அளித்த ஒரு பேட்டியில் பவித்ரா பார்ப்பதற்கு ரொம்ப ஒல்லியாக இருந்தார். இதை பார்த்து தான் நெட்டிசன்கள், எப்படி இவர்களுடைய லிப்ஸ் இவ்வளவு பெருசா ஆச்சி? குக் வித் கோமாளில் இருந்தபோது இப்படி இல்லை. இவர் தேவையில்லாத சர்ஜரி செய்து உடம்பை கொடுத்து கொண்டார் என்று உருவகேலி செய்து இருந்தார்கள். அதற்கு பவித்ராவும் விளக்கம் கொடுத்து இருந்தார்.
பவித்ரா பதிவு:
இப்படி இருக்கும் நிலையில் தன்னை பற்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பவித்ரா லட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய தோற்றம், உடல் எடை குறித்து பல வதந்திகள் சோசியல் மீடியாவில் பரவிக் கொண்டிருக்கின்றது. இதற்கு என்னுடைய தரப்பில் இருந்து எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அது ஓய்ந்தபாடில்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறேன். அதனால் தான் இப்படி எல்லாம் ஆகிவிட்டேன். நான் இதை செய்திருக்கிறேன், அதை செய்திருக்கிறேன் என்று தேவையில்லாமல் நிறைய வதந்திகளை பரப்பிக் கொண்டு வருகிறார்கள். சில கமெண்ட் எல்லாம் ரொம்ப உணர்ச்சியற்றதாக இருக்கின்றது.
சர்ச்சைகளுக்கு பதிலடி:
அதை நான் என்னவென்று குறிப்பிடவில்லை. நான் மீண்டும் சொல்கிறேன், நான் சீரியஸான உடல்நிலை பிரச்சனையில் இருக்கிறேன். தற்போது அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். சிலர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். உண்மையிலேயே என் மீது கரிசனமும் அன்பும் அக்கறையும் கொண்டு என்னை பற்றி விசாரித்தவர்களுக்கு நன்றி. என்னைப் பற்றி மீடியாக்களும் ஊடகங்களும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். எனக்கும் வாழ்க்கை இருக்கிறது. நானும் என்னுடைய எதிர்காலத்தை வழி நடத்த வேண்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் செய்யாத ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கும் செய்யாதீர்கள். உங்களிடமிருந்து கொஞ்சம் மரியாதையும் அன்பையும் தான் எதிர்பார்க்கிறேன். இவ்வளவு நாள் நீங்கள் எனக்கு கொடுத்த அன்பை மாற்றாதீர்கள். விரைவில் மீண்டும் வருவேன் என்று கூறியிருக்கிறார்.