கமலை நான் சந்தித்தது சுடுகாட்டில்தான்! எங்கள் நட்பு அங்குதான் ஆரம்பிச்சது-யார் அந்த நண்பர்?

By Ajju · 8/11/2017
"நான் டிராமல நடிச்சுட்டு இருந்த சமயம். 1974-ம் வருஷம் 'கிரேட் பேங்க் ராபரி'னு ஒரு நாடகத்திற்காக எனக்கு பெஸ்ட் ஆக்டர் விருது கிடைச்சது. அந்த விருது வாங்கும்போதுதான் கமல்ஹாசனை முதன்முதலில் பார்த்தேன். எனக்கு அவரைத் தெரியும். ஆனா, அவருக்கு அப்ப என்னை யார்னு தெரியாது. இதுதான் எங்கள் முதல் சந்திப்பு. இரண்டாவது சந்திப்பு இன்னும் சுவாரஸ்யமானது. எங்க வீடு மந்தைவெளியில இருக்கு. அதுக்கு பக்கத்துல ஒரு கிறிஷ்டியன் சிமென்டரியில் தான் 'சத்யா' பட ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. ஷூட்டிங்னாலே எல்லாரும் வேடிக்கை பார்ப்போம். நான் அப்படியே நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். அப்ப உள்ளே இருந்து யாரோ கூப்பிடற மாதிரி இருந்தது. முதல்ல எனக்கு சுடுகாட்டுக்குள் போகவே பயமா இருந்தது. அப்பதான் கமல் கூப்பிடறார்னு தெரிஞ்சது. உடனே ஓடிப்போய் அவரைப் பார்த்தேன். அப்ப நான் டிராமாவில் ஸ்கிரிப்ட் எழுதுறது, நடிக்கிறது, விகடன்ல எழுதுறதுனு நிறைய வேலைகள் பண்ணிட்டிருந்தேன். அது எல்லாமே அவர் தெரிஞ்சு வெச்சிருந்தார். அதைப் பற்றி அந்தச் சுடுகாட்டுலயே நின்னு ரொம்ப நேரம் பேசிட்டிருந்தார். பொதுவாக தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, எங்களுக்கு முதல் பழக்கமே சுடுகாட்டில் இருந்ததால்... ஜென்மம் ஜென்மமாக தொடர்கிறது எங்க நட்பு உறவு. அடுத்த நாள் காலையிலயே எங்க வீட்டுக்கு கமலோட கார் வந்தது. 'சார், உங்களைக் கூப்பிட்டு வரச் சொன்னார்'னு சொன்னாங்க. உடனே கிளம்பி அவர் வீட்டுக்குப் போனேன். 'அபூர்வ சகோதரர்கள்' படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதறீங்க என்று சொன்னார். அதேமாதிரி நான் உள்ளூர்ல டிராமா போட்டா என்னுடைய விசிட்டிங் கார்டு கமல்தான். அதுவே நான் வெளிநாட்டிக்குப் போய் டிராமா போட்டால் என்னுடைய விசா கார்டும் அவர்தான். 'ஆளவந்தான்' படத்துல 'கடவுள் பாதி, மிருகம் பாதி'னு சொல்லுவார் கமல். என்னைப் பொறுத்த வரை கமல், சிவாஜி பாதி, நாகேஷ் பாதி.
behindtalkies AMP · Quick view
View full