டேனியல் பாலாஜி செய்த உதவிகள் குறித்து அவரது பகுதி மக்கள் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. சமீப காலமாக சினிமா துறைகளில் பிரபலங்கள் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தான் பிரபல காமெடி நடிகர் சேஷு மாரடைப்பை காரணமாக உயிரிழந்த நிலையில் தற்போது மாரடைப்பு காரணமாக காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி. இவர் படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார்.
இவர் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து உள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்திலும், சூர்யாவின் காக்க காக்க படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு வில்லன் ரோல் செட் ஆகும் என்று யோசித்த கெளதம் மேனன், வேட்டையாடு விளையாடு படத்தில் இவருக்கு அமுதன் என்ற கொடூரமான சைக்கோ வில்லன் ரோலை கொடுத்தார்.
இதனை தொடர்ந்து பொல்லாதவன், பைரவா, பிகில், வடசென்னை என்று பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார். இப்படி ஒரு நிலையில் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. திருவான்மியூர் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது வழியிலேயே இறந்து இருக்கிறார். அவருக்கு வயது 48. அவரது உடல் சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள வரதம்மல் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் டேனியல் பாலாஜியின் தாய், தனது மகனின் உடலை பார்த்து கட்டி தழுவி கண்ணீர் வடித்த வீடியோ பலரை கலங்க வைத்தது. நடிகர் டேனியல் பாலாஜி சிறு வயதில் இருந்தே ஆவடியில் உள்ள ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு தனது தாயுடன் சென்று வருது வழக்கம். இந்த கோவில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து போய்யுள்ளது. அப்போது ஒரு முறை அவரது தாய் இந்த கோவிலை கட்ட ஆசைப்பட்டுள்ளார்.
தனது தாயின் ஆசைக்காக இந்த கோவிலை சொந்த செலவில் கட்ட ஆரம்பித்து இருக்கிறார். இந்த கோவில் கட்டிக்கொண்டு இருக்கும் போது யாஷ், தனது படத்தில் நடிக்க இவரிடம் கேட்டுள்ளார். ஆனால், அந்த சமயத்தில் கோவில் கட்டுமான பணிகள் நடந்து இருந்ததால் அந்த படத்தை நிராகரித்து இருக்கிறார். இருப்பினும் இதை அறிந்த யாஷ், டேனியல் பாலாஜி வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி இருக்கிறார். உடனே யாஷை தொடர்புகொண்டு தயாரிப்பாளரைச் சந்திக்காமலே ஏன் பணத்தை அனுப்பினீர்கள் என்று டேனியல் பாலாஜி கேட்டுள்ளார்.
அதற்கு யாஷ் “இது கோவிலுக்காக தவிர வேறு எவற்றுக்கும் கிடையாது’ என்று கூறியுள்ளார். அந்த கோவிலுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.தாய்க்காக கோவில் கட்டியது மட்டுமல்லாமல் நடிகர் டேனியல் பாலாஜி கண் தானமும் செய்து இருக்கிறார். அவர் இறந்த பின்னர் அவரது கண்களை அவரது ஆசைப்படி மருத்துவர்கள் தானமாக பெற்று இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.