கடந்த மாதம் தள்ளுபடி, இந்த மாதம் இறப்பு - தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கொண்டாடிய கதிரேசன் திடீர் இறப்பு.

By Rajkumar · 13/4/2024

தனுஷ் தங்கள் மகன் என்று வழக்கு தொடர்ந்து சமூக வலைதளத்தில் பிரபலமான மேலூர் கதிரேசன் திடீர் மரணம் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு வருகிறார் தனுஷ். தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக வெற்றி பெற்றாலும் இவரை சுற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்குகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தனுஷ் தங்கள் மகன் என்று மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி வழக்கு தொடர்ந்த சம்பவம் கடந்த சில வருடங்களாக சர்ச்சையாக சென்று கொண்டு இருந்தது.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி மீனாட்சி. இந்த தம்பதியினரின் மூத்த மகன் கலையரசன். இவர் பிளஸ் 1 படிக்கும் போது காணாமல் போய்விட்டார். இந்த நிலையில் சினிமாவில் நடித்து வரும் தனுசை பார்த்துவிட்டு தனது மகன் கலையரசன் தான் தனுஷ் என்றும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர் கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இப்படி ஒரு நிலையில் 'நடிகர் தனுஷ் தரப்பில் நீதிமன்றத்தில் போலியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு அந்த வழக்கில் என் புகாரை விசாரிக்க வேண்டும் கதிரேசன் தரப்பு வாதிட்டது. மேலும், தனுஷ் எங்கள் மகன் என்ற நிலையில் அவர் தான் எங்கள் பராமரிப்புக்கு பணம் தர வேண்டும் என்றும் முறையிட்டனர்.

மேலும், பெற்றோரான எங்களுக்கு பராமரிப்புக்கு ஆகும் செலவை மாதம் மாதம் குடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர். ஆனால், மதுரை ஆறாவது நீதித்துறை நடுவர் மன்றம் என் வழக்கை தள்ளுபடி செய்தது. ஆவணங்களின் அடிப்படையில் வழக்கில் முகாந்திரம் இல்லை என நீதித்துறை நடுவர் முடிவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து கதிரேசன் இந்த வழக்கை சென்னை உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கின் மீதான மனு கடந்த மாதம் 13ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 'கதிரேசன் மற்றும் மீனாட்சி இருவரும் தவறான உள்நோக்கத்த்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறி இருந்தார். மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஒரு உரிய ஆதாரங்களையும் கதிரேசன் மற்றும் மீனாட்சி தாக்கல் செய்யவில்லை என்று இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதனால் பல ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் இருந்து விடுபட்ட தனுஷ் நிம்மதியடைந்தார். இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதங்களே ஆன நிலையில் தற்போது கதிரேசன் காலமாகி இருக்கிறார். சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கதிரேசன் நேற்று சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். இவரது இறப்பு அவரது மனைவி மீனாட்சியை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full