'A' சான்றிதழ் அளித்தும் பள்ளி மாணவர்களை ராயன் படத்துக்கு அழைத்து சென்ற தனுஷ் ரசிகர்கள்- அரசு நடவடிக்கை எடுக்குமா?

By subhashini · 28/7/2024

தனுஷின் ராயன் படத்திற்கு பள்ளி மாணவர்கள் சென்றிருக்கும் விவகாரம் தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

அந்த வகையில் தற்போது தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் 50-ஆவது திரைப்படம் ‘ராயன்’. இந்த படத்தில் சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா, எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் ராயன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

தனுஷ் ரசிகர்கள் செய்த வேலை:

பிரபலங்கள் பலரும் ராயன் படத்தை பார்த்து பாராட்டி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் ராயன் படத்திற்கு பள்ளி மாணவர்களை அழைத்து சென்றிருக்கும் விவகாரம் தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, தனுஷின் ராயன் படத்திற்கு ஏ சான்றிதழை சென்சார் போர்டு அளித்திருக்கிறது. ஆனால், சிதம்பரத்தில் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தான் தனுஷ் ரசிகர்கள் திரையரங்கிற்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்.

பள்ளி மாணவர்கள் செய்தது:

படத்தைப் பார்த்து குழந்தைகள் எல்லோருமே நன்றாக இருக்கிறது என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்திருக்கிறார்கள். இதற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் திரையரங்கம் அனுமதி அளித்திருக்கிறது. இதைத்தான் நெட்டிசன்கள், இப்படி செய்ததற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் திரையரங்கம் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று சோசியல் மீடியாவில், கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு ராயன் பட குழுவினர் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ராயன் படம்:

படத்தில் ஹீரோ காத்தவராயன் பாஸ்ட் புட் ஹோட்டல் ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கை இருக்கிறார்கள். காத்தவராயன் அண்ணனாக மட்டுமில்லாமல் ஒரு அப்பாவாகவும் இரண்டு தம்பிகளையும், தங்கையும் பார்த்து வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய தங்கையை எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று காத்தவராயன் போராடிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய இரண்டாவது தம்பி முத்து அடிக்கடி குடித்துவிட்டு ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்து வருகிறார்.

படத்தின் கதை:

இப்படி இருக்கும் நிலையில் ஏரியாவில் முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவருடைய மகன் கொல்லப்படுகிறார். அந்த பிரச்சனையில் காத்தவராயன் தம்பி சிக்கி கொள்கிறார். இதற்கு பழி தீர்க்க அந்த மொத்த கும்பலும் முத்துவை கொலை செய்ய பார்க்கிறது. அதற்கு முன்பே ராயன் அந்த கும்பலை மொத்தமாக முடித்து விடுகிறார். கடைசியில் காத்தவராயனுக்கு என்ன ஆனது? இறுதியில் அவர் என்ன செய்தார்? காத்தவராயன் குடும்பத்தின் நிலை என்ன? அவருடைய தங்கைக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைத்தாரா? என்பதே படத்தினுடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full