படத்தை காண்பிச்சதும் யூடுயூப்ல போட வேணாம்னு சொல்லிட்டார் அப்பா - இயக்குனர் அவதாரமெடுத்த ஹரி மகன் பேட்டி.

By subhashini · 5/4/2024

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர் லிஸ்டில் இயக்குனர் ஹரிக்கு நிச்சயம் ஒரு தனி இடம் இருக்கிறது. இவருக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவின் மீது அதிக ஆர்வம் இருந்தது. இதனால் இவர் முதலில் இயக்குனர் செந்தில்நாதன், ஜீவபாலன், அமீர்ஜான், நாசர் உட்பட பல பேரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்குப் பின்னர் தான் இவர் இயக்குனர் ஆனார். இவர் இயக்கிய பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. ஆனால், சமீப காலமாக இவர் இயக்கிய ஒரு சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

மேலும், இவர் சிறிய இடைவெளிக்கு பின் யானை படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கி இருந்தார். இந்த படத்தில் ஹரியின் மச்சான் அருண் விஜய் தான் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இதனை அடுத்து தற்போது விஷால் நடிக்கும் 34 வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படம் வித்தியாசமான போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ஹரியின் மகன் ஸ்ரீராம் அவர்களும் ஹம்(hum) என்ற படத்தை இயக்கி நடித்து இருக்கிறார்.

ஸ்ரீராம் ஹரி பேட்டி:

இந்த படம் பாராட்டுகளை பெற்று வருகிறது. இவர் லயோலா கல்லூரியில் விஸ்காம் பைனல் தான் படித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் போது இவர் சினிமாவில் களமிறங்கி இறங்கிவிட்டார். இந்நிலையில் இது தொடர்பாக ஸ்ரீராம் ஹரி பேட்டியில், சிறு வயதில் இருந்தே அப்பாவுடன் நான் ஷூட்டிங் எல்லாம் போய் இருக்கிறேன். அங்கு நடக்கும் விஷயங்கள் எல்லாம் நன்றாக கவனித்து இருக்கிறேன். அதேபோல் படம் பார்க்க வேண்டும் என்று சொன்னால் வீட்டில் முடியாது என்று சொல்ல மாட்டார்கள். அப்பா - அம்மா இரண்டு பேருமே ரொம்ப ஃப்ரெண்ட்லி டைப். சினிமாவில் எனக்கு ஆர்வம் இருந்ததால் தான் லயோலா கல்லூரியில் விஸ்காம் சேர்ந்தேன்.

அப்பா-அம்மா குறித்து சொன்னது:

என்னுடைய விருப்பத்துக்கு எப்போதுமே அம்மா அப்பா தடை சொல்ல மாட்டார்கள். உனக்கு பிடிச்சிருந்தால் அதை செய் என்று என்கரேஜ் பண்ணுவார்கள். என் மேல் இவ்ளோ நம்பிக்கை வைத்து எல்லாத்துக்கும் துணையாக இருக்கும் என்னுடைய அப்பா, அம்மாவுக்கு எப்பவுமே நான் உண்மையாகவும், நன்றியோடு இருக்கணும் என்று நினைக்கிறேன். அதேபோல் நான் குறும்படம் இயக்குவது முதல் முறை கிடையாது. சின்ன வயதில் இருந்தே நிறைய எடுத்திருக்கிறேன். அதை அப்பா அம்மாவிடம் காண்பித்து இருக்கிறேன். அதனால் இப்ப நான் எடுத்த படம் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கிடையாது.

ஹரி சொன்ன அறிவுரை:

அப்பாவிடம் காண்பித்த போது அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இதை youtube-ல் வெளியிட வேண்டாம். அதுக்கு மேல ட்ரை பண்ணு என்று சொன்னார். இந்த படத்துக்காக ஸ்கிப்ட் எழுதி முடிக்க ஒரு வாரம் ஆனது. படத்தை இரண்டு வாரத்துக்குள் எடுத்து முடித்தோம். அதற்குப் பிறகு ஓடிடியில் கொண்டுவர அப்பாவோட உதவி இல்லாமல் ட்ரை பண்ணினேன். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தான் youtube இல் வெளியிட்டோம். உண்மையிலேயே என்னுடைய படத்திற்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. வீடியோ பப்ளிஷ் பண்ணினதுமே ஒரு லட்சம் வியூஸ் நெருங்கி விட்டது. நிறைய பேர் எங்களை வாழ்த்தினது மட்டுமில்லாமல் நான் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டி இருந்தார்கள்.

படம் குறித்து சொன்னது:

அடுத்த முறை அந்த தப்பை எல்லாம் சரி பண்ணிக்குவேன். இவரிடம் பணம் இருக்கு இதை ஈசியா எடுத்து இருக்காங்க? அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. என்னுடைய கிளாஸ்மேட் பிரண்டு எல்லாம் சேர்ந்து அவங்க கையில் இருக்கிற காசை போட்டு தான் இந்த படத்தை எடுத்தோம். இந்த படம் உருவாகுவதற்கு மொத்தமே டீம் பிரெண்ட்ஸ். எல்லோருடைய உழைப்பு இல்லை என்றால் இந்த படமே கிடையாது. நான் சினிமா பேக்ரவுண்டில் இருந்து வந்தவன் என்று வெளியில் தெரியலாம். ஆனால், என் ஃப்ரெண்டோட உழைப்பு என்று தெரியணும். அதுதான் என்னோட விருப்பம். மேலும், நான் கேட்டதுமே என்னுடைய சித்தி ஸ்ரீதேவி நடித்துக் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி என்று தான் சொல்லணும். அவர்கள் நடிக்கவில்லை என்றால் இந்த அளவுக்கு எங்களுக்கு ஷார்ட் பிலிம் பிரபலம் ஆகுமா? என்று தெரியவில்லை. இப்போது துப்பறிவாளன் 2 படத்தில் உதவி இயக்குனராக மூணு மாசமாக ஒர்க் பண்ணிட்டு இருக்கேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full