பா. ரஞ்சித் மீது பொதுவான முத்திரையைக் குத்துறாங்க, ஆனால் - இயக்குநர் ஷான் பளீச் பதில்

By subhashini · 19/9/2025

இயக்குனர் பா.ரஞ்சித் செய்திருக்கும் உதவிகள் குறித்து இயக்குனர் ஷான் அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. இவர் ஜாதிகளை மையமாக வைத்து தான் படங்களை கொடுத்து வருகிறார் என்று ஒரு கருத்து இருக்கிறது.

தற்போது இவருடைய தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தண்டகாரண்யம். இந்த படத்தினுடைய படப்பிடிப்பை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை என்ற கிராமத்தில் உள்ள அஞ்செட்டி என்ற பழங்குடியினர் வாழும் பகுதியில் நடைபெற்று இருந்தது. அந்த ஊருக்கு போக சரியான பாதை கூட இல்லை. கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் வரை நடந்துதான் போகணும். இப்படி இருக்கும்போது தான் பா.ரஞ்சித் அவர்கள் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனம் மூலம் அந்த பழங்குடியினர் கிராமத்திற்கு சாலை அமைத்து தந்திருந்தார். அந்த சாலையை தான் அங்குள்ள மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

ரஞ்சித் செய்த உதவி:

தற்போது இந்த விஷயம் தான் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த நிலையில் இந்த செய்தியை சோசியல் மீடியாவில் பகிர்ந்த இயக்குனர் ஷான், கடலூர அருகே பொம்மை நாயகி படத்தின் படப்பிடிப்பின் போதும் ஒரு அரசு ஆரம்ப பள்ளிக்கு பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் மூலம் சுற்றுச்சுவர் கட்டி கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இது தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் ஷான், பொம்மை நாயகி படத்திற்காக அரசு பள்ளி ஒன்றில் படப்பிடிப்பை நடத்தி இருந்தோம்.

இயக்குனர் சென் பேட்டி:

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தான் அந்த பள்ளிக்கூடம் இருக்கிறது. கொரோனா சமயம் என்பதால் அப்போது பள்ளிக்கூடங்கள் இயங்கவில்லை. ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி அந்த பள்ளிக்கூடத்தில் படப்பிடிப்பை நடத்தினோம். பொதுவாக மற்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தினால் அதற்காக தொகையை கொடுப்போம். இந்த பள்ளிக்கூடத்தில் பொறுத்தவரை மதில் சுவர்கள் எதுவுமே இல்லை. இதனால் இதைப் பற்றி நான் ரஞ்சித் அண்ணாவிடம் சொன்னேன். அவர் சரி என்று சொன்னதுமே அந்த பள்ளிக்கூடத்திற்கு மதில் சுவரை கட்டிக் கொடுத்தோம். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

நீலம் ப்ரொடக்ஷன் பற்றி சொன்னது:

அது மட்டுமில்லாமல் அந்த ஊர் மக்களுக்கு நிறைய புத்தகங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. நிறைய உதவிகளும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தை அப்போது நாங்கள் சொல்லவில்லை. இப்போது தண்டகாரண்யம் படப்பிடிப்பின் போது ரஞ்சித் அண்ணாவின் நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் சாலை அமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான் நாங்கள் சுவர் கட்டி கொடுத்ததை பகிர்ந்தேன். ரஞ்சித் அண்ணாவின் உடைய நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் நிறைய உதவிகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதை அவர்கள் வெளியே சொல்வது கிடையாது.

ரஞ்சித் பற்றி சொன்னது:

ரஞ்சித் அண்ணாவுக்கு சமூகம் சார்ந்து ஒரு பொதுவான முத்திரை குத்திருக்கிறார்கள். ஆனால், அவர் கட்டிக் கொடுத்திருக்கும் மதில் சுவர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கிடையாது. அது எல்லோருக்கும் பொதுவானது. இப்போது அவர்கள் அமைத்துக் கொடுத்த சாலையும் அப்படிதான். அந்த சாலையை பழங்குடியினர் மக்கள் மட்டும் பயன்படுத்த மாட்டார்கள். எல்லோருமே தான் உபயோகிக்க போகிறார்கள். இந்த மாதிரி உதாரணங்களை சொல்லும் போது மக்களுக்கு ஒரு புரிதல் வரும். அதனால் தான் நானும் அதை வெளிப்படையாக சொல்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full