'வேட்டையன்' படத்தில் சூர்யாவுக்கு THANKS CARD ஏன்?- இயக்குனர் டிஜே ஞானவேல் விளக்கம்

By Rajkumar · 12/10/2024

'வேட்டையன்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல், நடிகர் சூர்யா குறித்து பேசியிருக்கும் பேட்டி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'வேட்டையன்'.

இந்த படத்தை ஜெய் பீம் படம் இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா, துஷரா விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்திருக்கிறார்‌. மேலும், இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டதற்கு காரணமே இயக்குனர் டி.ஜே. ஞானவேல் சூர்யாவை வைத்து இயக்கிய ஜெய் பீம் படம் தான்.

ஜெய் பீம் படம்:

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. பழங்குடி மக்களின் வாழ்க்கையையும், உண்மையுலுமே அவர்களுக்கு நடந்த அநீதியையும் வெளிச்சம் போட்டு காட்டிய படம் தான் ஜெய் பீம். இந்தப் படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மக்களின் பாராட்டினை பெற்றனர். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி இருந்தது.

வேட்டையன் படம்:

இருந்தாலுமே, இந்த படம் பல விருதுகளை அள்ளி குவித்து இருந்தது. இதனால் தான் வேட்டையன் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஜெய் பீம் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் டிஜே ஞானவேல், வேட்டையன் படத்தின் ஆரம்பத்திலேயே ஜெய் பீம் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகர் சூர்யா, பிரகாஷ் ராஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

டிஜே ஞானவேல் பேட்டி :

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த டி.ஜே ஞானவேல் இது குறித்து பேசி உள்ளார். அதில், 'வேட்டையன்' படம் ஸ்டார்ட் பண்ணும்போது மூணு பேருக்கு தேங்க்ஸ் கார்டு போட்டு இருந்தேன். சூர்யா சாருக்கு எதுக்குன்னா, 'ஜெய் பீம்' என்கிறது எனக்கான எல்லா கதவையும் திறந்த படம். நான் நானாகவே இருப்பதற்கு முழுசாக வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, அதுக்குள்ள அவரும் வந்து, இன்னைக்கு உலகம் முழுக்க ஒரு கவனிப்பை ஏற்படுத்துற அளவுக்கு ஒரு வாய்ப்பு உருவானது அதுவும் ஒரு காரணம். இரண்டாவது சூர்யா சாருக்கு ஒரு படம் பண்றதுக்கு நான் ரெடி ஆயிட்டு இருந்தேன்.

சூர்யா குறித்து:

அந்த டைமில் எனக்கு வேட்டையன் வாய்ப்பு வரும்போது, இது உங்களுக்கு கிடைத்திருக்க நல்ல வாய்ப்பு நம்ம மீண்டும் கூட பண்ண முடியும். இதை மிஸ் பண்ணிடாதீங்க என்று சொன்னார். ஜெய் பீம் முடிச்சிட்டு, சூர்யா சாரை வைத்து படம் எடுக்கப் போகும் போது தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. சொல்லப்போனால் ரஜினி சாருக்கு வேற ஒரு கமிட்மெண்ட் இருந்தது. அது மிஸ் ஆயிடுச்சு. முதலில் சூர்யா சார் படம் பண்ணிட்டு அப்புறம் இது பண்றதா பேசியிருந்தோம். ரஜினி சாருக்கு அந்த கமிட்மெண்ட் மிஸ் ஆனதால், உடனே வேட்டையன் படம் பண்ண வேண்டியது ஆயிடுச்சு. அப்போ சூர்யா சார் தான் என்னை ஊக்குவித்தார். அதுக்கான தேங்க்ஸ் அது ‌என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full