'என்னுடைய முதல் படத்தில் முட்டைக்குள் இருக்கும் போது' பவதாரணி குறித்து வசந்தபாலன் உருக்கம்.

By subhashini · 28/1/2024

கடந்த சில தினங்களாவே சோசியல் மீடியா முழுவதும் இளையராஜா மகள் பவதாரணி இறப்பு செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி அவர்கள் மைடியர் குட்டி சாத்தான் என்ற படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின் இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவதாரணி. இந்த பாடலுக்காக இவர் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி இருந்தார். பின் இவர் தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடியிருந்தாலும் அவர் குறிப்பாக தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர் படங்களில் தான் அதிகம் பாடியிருக்கிறார்.

இவர் பாடுவது மட்டும் இல்லாமல் பல படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பவதாரணிக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது. இதற்காக இவர் சமீப காலமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து மாதங்களாக அவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்து இருக்கிறார். அதேபோல் இளையராஜாவும் இலங்கையில்தான் இருந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 7 மணி அளவில் மூச்சு திணறல் ஏற்பட்டு பவதாரணி உயிரிழந்திருக்கிறார். தற்போது அவருக்கு வயது 47. இவருடைய இறப்பு கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பவதாரணி இறப்பு:

பலரும் இளையராஜா குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து இருக்கிறர்கள். நேற்று மாலை பவதாரணி உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பின் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக பவதாரணி உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என பலருமே தங்களுடைய இரங்களை தெரிவித்து வந்தார்கள். இதை அடுத்து குடும்ப சம்பிரதாய படி சடங்குகள் எல்லாம் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழக்கப்பட்டது. இந்த நிலையில் பவதாரணியின் மறைவு குறித்து இயக்குனர் வசந்த பாலன் இரங்கல் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

https://twitter.com/Manjall/status/1750582612014567772

வசந்த பாலன் இரங்கல் பதிவு:

அதில் அவர், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உடன் என்னுடைய முதல் படம் அமைந்தது. அந்த படத்திற்காக அடிக்கடி ராஜா சார் வீட்டிற்கு போவேன். இளையராஜா அவர்களின் தி நகர் வீட்டை பற்றி ஒரு கதையே எழுதலாம். அத்தனை சம்பவங்கள், அவ்வளவு மனிதர்கள் வருவார்கள், போவார்கள். பரபரப்பாக இருக்கும். ராஜா சாரை சந்திக்க வருகிற நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கார்த்திக், யுவனை சந்திக்க வருகிற இயக்குனர்கள், பாடல் ஆசிரியர்கள் இருப்பார்கள். அதேபோல் யுவன், பவதாரணியின் நண்பர்கள் வட்டமும் அதிகம்.

பவதாரணி பாடல்:

சில நாட்களில் அதிகமாக கூட்டம் வந்து விடும். சிரிப்பும், பாட்டும், விளையாட்டுமாகவே வீடு முழுவதும் ஒலிக்கும். அதைப் பார்க்கும்போது வருடம் 16 படத்தில் வருகிற பழமுதிர்ச்சோலை பாடல் தான் கேட்கும். அவர்கள் வீட்டில் நடக்கும் நவராத்திரியில் பவதாரணியை அவர்கள் அம்மா இழுத்து வந்து பாட வைப்பார்கள். அது சிறு தேவதையுடைய குரல். பாடிவிட்டு பவதாரணி மீண்டும் விளையாட ஓடிவிடுவார். அவர் பலமுறை நேராக பாடி கொண்டு கேட்டிருக்கிறேன். என்னுடைய முதல் படத்தில் முட்டைக்குள் இருக்கும் போது முட்டைக்குள் இருக்கும் போது என்னதான் சொல்லுச்சாம் கோழி குஞ்சு? என்ற சின்ன பாடலை பவதாரணி பாடியிருந்தார்.

பவதாரணி குறித்து சொன்னது:

பவதாரணி பாடும் பாடல் ஒரு குழந்தையும், தெய்வமும் கலந்து இருக்கும். மயில் போல பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஜனனி, ஜனனி பாடல் ஆன்மாவை உருக்கும் பாடல். இப்படி இருக்கும் போது பவதாரணி இழப்பு செய்தி நேற்றைய நாளை வண்ணம் இல்லாத ஒலி, ஒளியில்லாத இசை இல்லா நாளாக மாற்றி விட்டது. பவதாரணி 47 வயது என்பதை மூளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மயில் போல பொண்ணு தான் இரக்கமற்ற காலம் எல்லாவற்றையும் இப்படித்தான் குலைத்து போட்டு விளையாடுமோ? என்று வேதனையுடன் பதிவிட்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full