'தன்னலமின்றி உழைக்க இந்த புதிய பயணத்தைத் தொடங்குகிறேன்' - திமுகவில் இணைந்த சத்யராஜ் மகள்
திமுகவில் இணைந்தது குறித்து திவ்யா சத்யராஜ் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் சத்யராஜ். இவர் ‘கட்டப்பா’ என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டவர். ‘கடலோர கவிதைகள்' என்ற படத்தின் மூலம் தான் இவர்கள் சினிமா உலகில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார்.
மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் ஆரம்பத்தில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் பின்னர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தார். தற்போதும் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், திவ்யா அப்படி இல்லை.
திவ்யா சத்யராஜ்:
இவர் சிறு வயதில் படங்களில் நடிக்க ஆசைப்பட்டாலும், பின்னர் வேறு துறைக்கு மாறிவிட்டார். தனது அப்பாவை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி. இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவராக சத்யராஜ் மகள் திவ்யா இருக்கிறார். இவர் நியூட்ரிஷியன் துறையில் எம். ஃபில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்ஃபரன்ஸ்களும் நடத்தி இருக்கிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் திவ்யா அடிக்கடி ஊட்டசத்துக் குறித்தும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பதிவிட்டு வருகிறார்.
திமுக வில் இணைந்தார்:
இந்நிலையில், தமிழக முதல்வர், கழகத் தலைவர் முன்னிலையில் இன்று, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்தார். அப்போது கழகப் பொறுப்பாளர் டி. ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே .என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி. கே. சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது குறித்து திவ்யா சத்யராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்று என் வாழ்வில் ஒரு முக்கியமான அத்தியாயத்தின் ஆரம்பம்.
திவ்யா சத்யராஜ் பதிவு:
நான் தி.மு.க வில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் உண்மையிலேயே பெருமை கொள்கிறேன். எங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளிப்பதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். என் தந்தையும் தோழருமான புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்கள், சமத்துவம் மற்றும் சமூக நீதியின் வேரூன்றிய கொள்கைகளில் வாழ்வின் தான் உண்மையான ஆடம்பரங்கள் என்று எனக்கு எப்போதும் கற்பித்து வருகிறார்.
"திராவிட மாடல் நாயகர்" மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்த நடிகர் சத்யராஜ் அவர்களின் மகள் செல்வி.திவ்யா சத்யராஜ் அவர்கள் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார்.
— K.N.NEHRU (@KN_NEHRU) January 19, 2025
அப்போது கழக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.டி. ஆர். பாலு,… pic.twitter.com/IYzA1MFzCf
தன்னலமின்றி உழைக்க விரும்புகிறேன்:
இந்தக் கொள்கைகள் எனது உலக கண்ணோட்டத்தை வடிவமைத்துள்ளது. இன்று நான் பொது சேவையில் இறங்கும்போது அவை என்னை ஊக்குவிக்கின்றன. மேலும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐயா வகுத்தளித்த அருட்பணியால் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டின் பெருமைக்குரிய மகளாக, நம் மக்களின் முன்னேற்றத்திற்காக தன்னலமின்றி உழைக்க இந்த புதிய பயணத்தைத் தொடங்குகிறேன். என் குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் எனக்கு ஆதரவாக நிற்க விரும்புகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து மாற்றத்தை உண்டாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார்.